மத்திய பிரதேசத்தில் பேருந்தும் டிரக்கும் மோதிக்கொண்ட விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மத்தியபிரதேச மாநிலம் ரெவா மாவட்டத்தில் இருந்து தனியார் பேருந்து ஒன்று இன்று காலையில் சித்கி நகருக்கு புறப்பட்டு சென்றது. பேருந்தில் 30 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். குத் சாலையில் பேருந்து வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது அதே சாலையின் எதிரே டிரக் ஒன்று வந்துள்ளது.
திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்ற பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் எதிரே வந்த டிரக் மீது பயங்கரமாக மோதியது. இதில் பேருந்தின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. விபத்தில் படுகாயமடைந்து 5 பேர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியாகினர். மற்றவர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.
அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக மீட்பு பணியில் இறங்கினர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் பலத்த காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆம்புலன்ஸில் செல்லும் வழியிலேயே 4 பரிதாபமாக உயிரிழந்தனர். 23 பேர் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.