
ஏலக்காயை வெறும் நறுமணம்கூட்டும் பொருள் என்று மட்டும் நாம் வரையறுத்துவிட முடியாது. அதனுள் நிறைய மருத்துவக் குணங்களும் புதைந்து கிடக்கின்றன.
ஏலக்காய் வகைகள்
நிறத்தைப் பொறுத்தும், நறுமணம் அளிக்கும் குணத்தைப் பொறுத்தும் ஏலக்காய் மூன்று வகைப்படும்.
1.. பச்சை ஏலக்காய்
தென்னிந்தியாவில் விளையும் இவ்வகை ஏலக்காய் நன்கு கொழுத்த பச்சை ஓடுகளைப் பெற்றிருக்கும். இதையே மிகச் சிறந்த தரமான வகை எனக் குறிப்பிடலாம். முழுதாகவும் பொடியாகவும் கிடைக்கும் இதன் ஓடு, நீண்ட நாள்களுக்கு வலுவாக இருப்பதால், விதைகளின் மணம் மாறாமல் இருக்கும்.
இது நறுமணத்துக்காகவும், இனிப்பு வகைகள் செய்வதற்கும் பயன்படும். இதை பால் பொருள்கள் சேர்க்கவும் பயன்படுத்தலாம். தேநீர், காபி, கேக் வகைகள், பிரெட் ஆகியவற்றைத் தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர்.
2.. காவி ஏலக்காய்
இது, பச்சை ஏலக்காயைவிடப் பெரியதாகவும், ஓடுகளில் முடிபோன்ற அமைப்பையும் பெற்றிருக்கும். பார்ப்பதற்கு சிறிய தேங்காயைப்போல் தோற்றமளிக்கும். இதையும் நறுமணத்துக்காக பிரியாணி, கறி, கரம் மசாலா முதலியவற்றில் பயன்படுத்துவர்.
இதன் விதைகளில் உள்ள மாவுச்சத்து, புரதச்சத்து, ஈரப்பதம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் இரும்புச்சத்துக்களால் நிறைய மருத்துவக் குணங்களைக் கொண்டிருக்கிறது.
3.. பொடி ஏலக்காய்
ஏலக்காய்களை நன்கு பொடியாக்கி நிறைய உணவு வகைகளில் உபயோகிக்கிறார்கள். ஆனால் முழு ஏலக்காயைவிட பொடியில் மணம் குறைவு. இந்தப் பொடி கடைகளில் கிடைக்கும்.
ஏலக்காயின் மருத்துவப் பயன்கள்
1.. விக்கல் போக்கும்
இது நடுக்கத்தைப் போக்கக்கூடியது; விக்கலில் இருந்து நம்மைக் காப்பாற்ற உதவும். உடலில் ஏற்படும் தசைப்பிடிப்பு, குடல் மற்றும் வயிற்றுப் பிடிப்புகளிலிருந்து நிவாரணம் பெற்றுத் தரும்.
2.. நச்சுத்தன்மை நீக்கும்
இதில் இருக்கும் மினரல்கள், வைட்டமின் ஏ, பி, சி, நியாசின், ரிபோப்ஃளேவின் ஆகியவை உடலின் நச்சுத்தன்மையை நீக்கக் கூடியவை. இது ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். கல்லீரலில் இருக்கும் தேவையற்ற யூரியா, கால்சியம் மற்றும் இதர நச்சுகளை நீக்கும். மகப்பேற்ருக்குப் பிறகு இதைப் பெண்கள் அதிகம் பயன்படுத்தலாம்.
3.. ஆன்டிஆக்ஸிடன்ட்
இதில் இருக்கும் ஊட்டச் சத்துகள், வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய் ஆகியவை ஆன்டிஆக்ஸிடன்ட்களாகப் பயன்படுகின்றன. இவை உடலில் இருக்கும் செல்கள் முதிர்ச்சி அடைவதைத் தடுத்து இளமையைத் தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது.
4.. மனஅழுத்தம் குறைக்கும்!
மனஅழுத்தத்தைக் குறைக்கும் இதன் குணம் குறித்து இன்னும் ஆராய்ச்சிகள் நடந்துவந்தாலும், ஆயூர்வேத மருத்துவம், `ஏலக்காய் தேநீர் மன அழுத்தத்துக்கு நல்லது’ எனப் பரிந்துரைக்கிறது. இது, இயற்கையாக நச்சுத்தன்மையை நீக்கி, செல்களை மீண்டும் பொலிவுபெறச் செய்வதாலும் மனஅழுத்தம் குறையும்.
5.. சளி மற்றும் காய்ச்சலுக்கு நிவாரணம்
இதில் காரத்தன்மை இருப்பதால், சளி மற்றும் காய்ச்சலைத் தடுத்துவிடக்கூடியது. ஒரு ஏலக்காய் டீ குடித்தால் சளி, காய்ச்சல் பறந்துவிடும்.
6.. கிருமிகளில் இருந்து காக்கும்!
கிறுமித்தொற்று இருப்பவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம். இதில் இருக்கும் எண்ணெய் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்றவற்றின் வளர்ச்சியைத் தடுக்கும்.
7.. வாய் துர்நாற்றம் போக்கும்!
வாய் துர்நாற்றத்தையும் சரிசெய்யக்கூடியது இது. வாய்ப்புண்ணையும் சரிசெய்யும். இரண்டு ஏலக்காய் விதைகளை வாயில் போட்டு மென்றாலே துர்நாற்றம் நீங்கிவிடும்.
8.. ஆஸ்துமாவுக்கு நல்லது!
ஆஸ்துமா இருக்கும் நோயாளிகளுக்கு இது மிகுந்த பயனைத் தரும். கக்குவான் இருமலுக்கும் மார்புச் சளிக்கும் நல்ல மருந்து.
9.. பசியைத் தூண்டும்
சிறிது ஏலக்காய்த் தூளை உணவில் சேர்த்தாலோ, விதைகளை மென்றுவந்தாலோ அது நன்கு பசியைத் தூண்டும்.
10.. செரிமானத்தை எளிதாக்கும்
அஜீரணக் கோளாறு, வயிற்றுப் பொருமல் ஆகியவற்றுக்கு இது சிறந்த தீர்வைத் தரும். உணவை எளிதில் செரிக்க உதவும்.