Cauliflower Vadai : பருப்பு வடை தெரியும். இதென்ன காலிஃபிளவர் வடை!

By Dinesh TGFirst Published Nov 11, 2022, 12:02 PM IST
Highlights

இன்று நாம் சற்று வித்தியாசமாக கிரிஸ்பியான , சுவையான காலிஃபிளவர் வைத்து வடை எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தமிழகத்தில் ஆங்காங்கே பருவ மழை பெய்ய ஆர்மபித்து விட்டது. இந்த கொட்டும் மழையில் சூடாகவும், மொறுமொறுப்பாகவும், கொஞ்சம் வித்தியாசமாகவும் ஒரு ரெசிபி செய்து கொடுத்தால், சாப்பிடாமல் இருப்பார்களா ?  அந்த வகையில் இன்று நாம் சூப்பரான ஒரு வடை ரெசிபியை பார்க்க உள்ளோம். 

வழக்கமாக பருப்பு வடை, மெது வடை, கீரை வடை என்று தான் சமைத்து சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் சற்று வித்தியாசமாக கிரிஸ்பியான , சுவையான காலிஃபிளவர் வைத்து வடை எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்: 

காலிஃபிளவர் -1 கப் 
வெங்காயம் -1
பச்சை மிளகாய் -2
சோம்பு -1/2 ஸ்பூன் 
இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 ஸ்பூன்
சில்லி பிளேக்ஸ் -1 ஸ்பூன்
மல்லித்தூள் -1/2 ஸ்பூன் 
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1/2 ஸ்பூன்
எலுமிச்சை பழம் – 1/2 
கடலை மாவு -100 கிராம்
அரிசி மாவு – 2 ஸ்பூன்
ரவை – 2 ஸ்பூன், 
கறிவேப்பிலை- 1 கொத்து 
கொத்தமல்லி – 1 கையளவு 
உப்பு-தேவையான அளவு 
எண்ணெய் – தேவையான அளவு 

ஆரோக்கிய நலன்களை வாரி வழங்கும் "பீட்ரூட் கட்லெட் " இன்றே செய்து சாப்பிடுங்க.

செய்முறை:

முதலில் காலிஃபிளவரில் இருக்கும் தண்டினை எடுத்து விட்டு , அதில் உள்ள பூக்களை மட்டும், ஒவ்வொன்றாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.  அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து , அதில் வெட்டி வைத்துள்ள பூக்களை போட்டு 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும். 

பின் பூக்களை வடித்துக் கொண்டு, துருவிக் கொள்ள வேண்டும். இப்போது ஒரு கிண்ணத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கொண்டு, பின் அதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். 

பின் அதே கிண்ணத்தில் இஞ்சி பூண்டு விழுது, சோம்பு, மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், தனியாத் தூள், சில்லி பிளேக்ஸ் , உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து விட்டு, பின் அதில் துருவி வைத்துள்ள காலிஃபிளவரையும் சேர்த்து கலந்து விட வேண்டும். 

இப்போது இந்த கலவையில் அரிசி மாவு, ரவை மற்றும் கடலை மாவு சேர்த்து, எலுமிச்சைபழத்தை பிழிந்து விட்டு, அனைத்தையும் நன்றாக பிசைந்து, மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு கடாய் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். என்னை சூடான பின்,அடுப்பின் தீயினை மிதமாக வைத்து, மாவினை கொஞ்சம் கையில் எடுத்து, வடை போன்று தட்டி,எண்ணையில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். கிரிஸ்பியான காலிஃபிளவர் வடை ரெடி!

click me!