சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நடந்த பயங்கர விபத்தில் சீரியல் நடிகை தேவி பிரியா அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். அதைப்பற்றி பார்க்கலாம்.
டப்பிங் கலைஞர் மற்றும் சின்னத்திரை நடிகையாக அறியப்படும் தேவி பிரியா, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி தனது கார் மூலம் பயணித்துக் கொண்டிருந்தார். அவருடன் அவரது உதவியாளர் திவாகர் மற்றும் ஓட்டுநர் முத்து கணேஷ் ஆகியோர் இருந்தனர். பெரம்பலூர் பகுதிக்கு அருகில் நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக காரின் டயர் பஞ்சரானது. உடனடியாக வாகனத்தை சாலையோரம் நிறுத்திய ஓட்டுநர் முத்து கணேஷ், டயரை மாற்றும் பணியை மேற்கொண்டார். நடிகை தேவி பிரியா மற்றும் அவரது உதவியாளர் வாகனத்திற்கு வெளியே சற்று தள்ளி நின்று கொண்டிருந்தனர்.
24
பலியான கார் டிரைவர்
இந்த நேரத்தில் பின்னாலிருந்து மிக அதிக வேகத்தில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து நின்று கொண்டிருந்த தேவி பிரியாவின் காரின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் கார் முற்றிலும் சிதைந்து போனது. டயரை மாற்றிக் கொண்டிருந்த ஓட்டுநர் முத்து கணேஷின் மீது பின்னால் வந்த வாகனம் நேரடியாக மோதியதால், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
34
காயமின்றி தப்பிய தேவி பிரியா
விபத்து நடந்த தருணத்தில் சற்று தூரத்தில் நின்றிருந்த நடிகை தேவி பிரியாவுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. அவர் மயிரிழையில் உயிர் தப்பி உள்ளார். உதவியாளர் திவாகருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் உடனடியாக மீட்கப்பட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த முத்து கணேஷின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மோதிய வாகனத்தை கண்டுபிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் ஓட்டுநர் பலியானதால் நடிகை தேவி பிரியா கடும் சோகத்தில் உள்ளார். நடிகை தேவி பிரியா இதுவரை 50 சீரியல்களுக்கு மேல் நடித்துள்ளார். சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக சினிமா மற்றும் சின்னத்திரையில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.