Karthigai Deepam Serial Today Episode : கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்திக்கை சிறையில் இருந்து வெளியே கொண்டுவருவதற்காக போராட்டத்தில் குதித்துள்ளார் ரேவதி.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ‘கார்த்திகை தீபம்’. நாளுக்கு நாள் விறுவிறுப்பான திருப்பங்களுடன் நகர்ந்து வரும் இந்தத் தொடரில், கார்த்திக்கைச் சுற்றி உருவாகியுள்ள பிரச்சனை தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த எபிசோடில், கார்த்திக் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி ரேவதி தனியாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். கார்த்திக்கான நீதியைப் பெற்றே தீர வேண்டும் என்ற அவரது உறுதியால், இந்தப் போராட்டம் தற்போது பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
ரேவதியின் போராட்டம் குறித்து சாமுண்டீஸ்வரி மற்றும் சந்திரகலாவுக்கு தகவல் கிடைக்கிறது. இதற்கிடையில், கார்த்திக்கிற்கு ஆதரவாக ஊர் மக்களும் ரேவதியின் பக்கம் திரளத் தொடங்குகின்றனர். இதனால் போராட்டம் மேலும் தீவிரமடைகிறது. நிலைமை கட்டுக்குள் வராமல் போக, சந்திரகலா சாமுண்டீஸ்வரியிடம் ஆலோசனை கேட்கிறாள். இதனால் ஆத்திரமடையும் சாமுண்டீஸ்வரி, போராட்டத்தில் ஈடுபடுபவர்களை விரட்டியடிக்க உத்தரவிடுகிறார். இதையடுத்து போலீசார் போராட்டக்காரர்களை கலைக்க முயற்சிப்பதுடன், ரேவதியிடமும் கடுமையாக நடந்து கொள்கின்றனர். இதனால் சம்பவ இடத்தில் பதற்றமான சூழல் உருவாகிறது.
இந்த சம்பவம் அத்துடன் முடிவுக்கு வரவில்லை. அங்கு வந்த செய்தியாளர்களிடம் ரேவதி நடந்த சம்பவங்களை வெளிப்படையாக எடுத்துரைக்கிறார். இதனால் பிரச்சனை மேலும் பூதாகரமாகிறது. விவகாரம் மேலதிகாரிகளின் கவனத்திற்குச் செல்ல, எஸ்.பி. நேரடியாக சம்பவ இடத்திற்கு வருகிறார். கார்த்திக்கை எந்த அடிப்படையில் கைது செய்தீர்கள் என இன்ஸ்பெக்டரிடம் அவர் கேள்வி எழுப்புகிறார். இதற்கு உரிய பதிலை அளிக்க முடியாமல் போலீஸ் தரப்பு தடுமாறுகிறது. இதன் தொடர்ச்சியாக, கார்த்திக்கை விடுவிக்கும் நிலைக்கு போலீசார் தள்ளப்படுகின்றனர். இதனால் ரேவதியின் போராட்டம் ஒரு கட்டத்தில் வெற்றியை நோக்கி நகர்கிறது.
கார்த்திக் வெளியே வந்ததும், ரேவதி அடுத்ததாக சாமுண்டீஸ்வரியை எதிர்கொள்ள தயாராகிறாள். நடந்த சம்பவங்களால் கோபத்தில் இருக்கும் ரேவதி, நேராக சாமுண்டீஸ்வரியின் வீட்டை நோக்கி செல்கிறாள். அங்கு இருவருக்கும் இடையே நேருக்கு நேர் மோதல் ஏற்படுமா? கார்த்திக்கிற்கு எதிராக அடுத்ததாக என்ன திட்டம் தயாராகிறது? ரேவதியின் நடவடிக்கைக்கு சாமுண்டீஸ்வரி எப்படி பதிலடி கொடுக்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது. இப்படி அடுத்தடுத்து பரபரப்பான சம்பவங்களுடன் நகரும் ‘கார்த்திகை தீபம்’ சீரியலின் இன்றைய எபிசோட், கார்த்திக்கின் விடுதலைக்குப் பிறகு கதையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.