Bigg Boss Fame Pradeep Antony : நடிகரும் பிக் பாஸ் பிரபலமுமான பிரதீப் ஆண்டனியின் சமீபத்திய சமூக வலைதளப் பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதீப் ஆண்டனி சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகே அவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இதனைத் தொடர்ந்து கடந்த 2024-ம் ஆண்டு பூஜா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2026 ஏப்ரல் மாதத்தில் ஆண் குழந்தை பிறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனது திருமண வாழ்க்கை குறித்து பிரதீப் ஆண்டனி வெளியிட்டுள்ள பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குழந்தையைப் பெற்றெடுக்கும் முன்பு, அதை வளர்க்கும் அளவுக்கு தன்னிடம் பக்குவம் இருக்கிறதா என்ற சந்தேகம் தனக்கு இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நண்பர்களிடம் குழந்தையைப் பற்றியும், அதை வளர்ப்பது குறித்தும் தான் சில நேரங்களில் விளையாட்டாகப் பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் குழந்தை பிறந்த பிறகு, அதன் மீது தனக்கு எதிர்பாராத அளவுக்கு பாசமும் பிணைப்பும் உருவானதாகவும் பிரதீப் கூறியுள்ளார். தனது கைகளில் இருக்கும் குழந்தை மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்க்கும்போது கிடைத்த உணர்வு ஒவ்வொரு நாளும் புதிதாக இருந்ததாகவும் அவர் உருக்கமாக பகிர்ந்துள்ளார். ஆனால் தற்போது அந்தக் குழந்தை தன்னுடன் இல்லை என்றும், குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருந்த கடைசி தருணம் நடந்து ஒரு மாதம் ஆகிவிட்டதாகவும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
35
தவறான நபரை திருமணம் செய்துவிட்டேன்
மேலும், தனது குழந்தைக்கு ஒரு நல்ல குடும்பச் சூழலை உருவாக்க வேண்டும் என்றும், தான் வளர்ந்த சூழலிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு நல்ல வாழ்க்கையை குழந்தைக்கு கொடுக்க வேண்டும் என்றும் எப்போதும் ஆசைப்பட்டதாக பிரதீப் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த விஷயத்தில் தான் தோல்வியடைந்துவிட்டதாகவும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். தனது திருமண வாழ்க்கை குறித்தும் பிரதீப் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். தான் தவறான நபரை திருமணம் செய்துவிட்டதாக நினைப்பதாகவும், இந்த உறவு தன்னை மனதளவில் மிகவும் பாதித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருவரின் எதிர்பார்ப்புகளும் வாழ்க்கை முறையும் முற்றிலும் மாறுபட்டிருந்ததால், தொடர்ந்து கருத்து மோதல்கள் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
முந்தைய உறவில் ஏற்பட்ட மனரீதியான பலவீனமான காலகட்டத்தில் தனக்குக் கிடைத்த அன்பை இறுக்கமாகப் பற்றிக் கொண்டதாகவும், அந்த முடிவு தற்போது தனக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் பிரதீப் தெரிவித்துள்ளார். இந்த திருமண உறவிலிருந்து விலக முடிவு செய்ததற்கான காரணமாகவும் இதையே அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த உறவில் தன்னால் சுதந்திரமாக இருக்க முடியவில்லை என்றும், தன்னைப் பற்றிய புரிதலும் அன்பும் குறைந்துவிட்டதாக உணர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
55
குழந்தைக்கு பெயர்கூட வைக்கவில்லை
குறிப்பாக, தனது குழந்தைக்கு இதுவரை ஒரு பெயரைக்கூட தன்னால் வைக்க முடியவில்லை என்று பிரதீப் ஆண்டனி கூறியிருப்பது ரசிகர்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது உணர்வுகளை வெளிப்படையாகப் பகிர்ந்த பிறகு பலர் தன்னை தொடர்புகொண்டு அமைதிப்படுத்த முயற்சிப்பதாகவும், ஆனால் மனதில் இருப்பதை முழுமையாகப் பேசுவதற்கு தனக்கு யாரும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது தற்போதைய நிலை குறித்து மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பிரதீப் வெளியிட்டுள்ள இந்தப் பதிவு, அவரது ரசிகர்கள் மற்றும் சமூக வலைதளப் பயனர்களிடையே பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அவர் மனைவியுடன் தற்போது இணைந்து வாழவில்லை என்பது அவரது பதிவிலிருந்து தெரியவருகிறது. குழந்தை தன்னுடன் இல்லாத வேதனையும் அவருடைய பதிவில் வெளிப்பட்டுள்ளதால், ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.