Social Media செல்போன் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில் 16 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சமூக வலைத்தளங்களைத் தடை செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
இன்றைய டிஜிட்டல் உலகில், பெரியவர்களை விட குழந்தைகள்தான் அதிக நேரம் ஸ்மார்ட்போன்களில் செலவிடுகிறார்கள். குறிப்பாக, சமூக வலைத்தளங்களில் மணிக்கணக்கில் நேரத்தை வீணடிப்பது குழந்தைகளின் உடல் மற்றும் மன நலனைப் பெரிதும் பாதிக்கிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் அதிரடி நடவடிக்கையை எடுத்து ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்துள்ளது கர்நாடக மாநில அரசு.
இந்தியாவின் ஐடி தலைநகரான (Tech Hub) பெங்களூருவை உள்ளடக்கிய கர்நாடக மாநிலம், 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் சமூக வலைத்தளங்களை (Social Media) பயன்படுத்துவதற்கு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில் இத்தகைய ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டு வரும் முதல் மாநிலமாக கர்நாடகா உருவெடுத்துள்ளது.
25
குழந்தைகளின் நலனைக் காக்க புதிய அதிரடி!
சமீபத்தில் நடைபெற்ற கர்நாடக மாநில பட்ஜெட் கூட்டத்தொடரில், அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டார். பட்ஜெட் உரையின் போது பேசிய அவர், "அதிகரித்து வரும் செல்போன் பயன்பாட்டினால் குழந்தைகள் மத்தியில் ஏற்படும் மோசமான பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கத்தோடு, 16 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்படுகிறது" என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
ஃபேஸ்புக் (Facebook), இன்ஸ்டாகிராம் (Instagram), எக்ஸ் (X) போன்ற பல்வேறு சமூக வலைத்தளங்களில் கட்டுப்பாடின்றி உலா வரும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதுமட்டுமின்றி, ஸ்க்ரீன் டைம் (Screen Time) அதிகரிப்பதால் குழந்தைகளின் படிப்பு மற்றும் தூக்கமும் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. இவற்றைக் கருத்தில் கொண்டே கர்நாடக அரசு இந்த கடுமையான முடிவை எடுத்துள்ளது.
35
பெற்றோர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு!
கர்நாடக அரசின் இந்த அறிவிப்பு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தாலும், பெரும்பாலான பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. குழந்தைகள் செல்போனுக்கு அடிமையாவதைத் தடுக்க தாங்கள் படும் பாட்டிற்கு, அரசின் இந்தச் சட்டம் ஒரு சிறந்த தீர்வாக அமையும் எனப் பல பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இந்தத் தடையை நடைமுறையில் எப்படிச் செயல்படுத்தப் போகிறார்கள் என்பது குறித்த தெளிவான விதிமுறைகள் இன்னும் வெளியாகவில்லை. குழந்தைகளின் வயதை உறுதி செய்யும் தொழில்நுட்பம் (Age Verification), அதற்கான அபராதம் மற்றும் விதிகள் குறித்த முழுமையான வழிகாட்டுதல்களை மாநில அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
55
முன்னோடித் திட்டம்
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் இதுபோன்ற தடைகள் ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் கர்நாடகாவின் இந்த முன்னோடித் திட்டம் பெருமளவு கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படும் பட்சத்தில், இந்தியாவின் பிற மாநிலங்களும் இதேபோன்று சமூக வலைத்தளக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர அதிக வாய்ப்புகள் உள்ளன.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.