
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு பெரிய அரசியல் கட்சிகளும் இன்று ஒரே விஷயத்தில் அதிக கவலையுடன் கவனிக்கத் தொடங்கியுள்ளன. அது நடிகர் விஜய் முன்வைக்கும் அரசியல் கொள்கைகள் அல்ல; மாறாக, அவர் மக்களிடையே உருவாக்கியுள்ள “காப்பாளர்” அல்லது “ரட்சகர்” என்ற பிம்பமே. இந்த உருவம், வழக்கமான அரசியல் விமர்சனங்களுக்குள் அடங்காத ஒன்று என்பதால், அது பெரிய கட்சிகளுக்கு சவாலாக மாறியுள்ளது.
தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக விவாதங்கள் கொள்கை, சமூக நீதி, ஆட்சி அனுபவம், தேர்தல் வாக்குறுதிகள் என்ற வரம்புக்குள் இருந்தன. ஆனால் நடிகர் விஜய் அரசியலுக்குள் வந்ததில் இருந்து, அந்த வரம்பு மெதுவாக மாற்றம் பெறுகிறது. அவர் பேசும் வார்த்தைகளில் அரசியல் வாதம் குறைவு. மனித உணர்ச்சிகளுக்கான நேரடி அணுகுமுறை அதிகம். இது “அவர் நம்மைப் போல ஒருவன்” என்ற உணர்வை பலரிடமும் உருவாக்குகிறது. இது ஏற்கனவே சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் உருவாக்கி வைத்த அதே பிம்பத்தை விஜய்க்கும் கொடுக்கிறது என்று சொல்லலாம்.
விஜயின் ரசிகர் கூட்டம், ஒரு சாதாரண ரசிகர் வட்டமாக இல்லாமல், ஏற்கனவே ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சமூகமாக மாறியுள்ளது. திரைப்படங்களில் அவர் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்கள், அநியாயத்திற்கு எதிராக அமைதியாக போராடும் மனிதன், பலவீனர்களுக்காக குரல் கொடுப்பவன் என இவை அரசியல் வாழ்க்கைக்கும் பலமாக உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்த தொடர்ச்சியான இமேஜ், அரசியல் மீது நம்பிக்கை இழந்த இளம் தலைமுறையையும் ஈர்க்கிறது. ஒருகாலத்தில் 30 முதல் 40 வயதுக்கும் மேற்பட்டோர் மட்டுமே அரசியல் களத்தில் இருந்தனர்.
தற்போது நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தஒட்டுமொத்த தமிழக இளைஞர்கள் மத்தியில் அரசியல் குறித்த பேச்சை, எதிர்பார்ப்பை தெருவெங்கும் கொண்டு சென்றுள்ளது என்று சொன்னால் மிகையாகாது. இதில்தான் ஆளும் கட்சி திமுக, எதிர்க்கட்சி அதிமுக போன்ற கட்சிகள் கவலை அடைகின்றன. அவர்களிடம் வலுவான கட்சி அமைப்பு, ஆட்சித் திறன், நீண்ட வரலாறு ஆகியவை உள்ளன.
ஆனால் விஜய் எந்த அரசியல் பொறுப்பையும் இதுவரை வகிக்காத நிலையில் கூட, மக்களின் மனதில் “மாற்று நம்பிக்கை” என்று பிடிக்கத் தொடங்கியுள்ளார். இது பாரம்பரிய அரசியல் கணக்குகளை குழப்பும் ஒன்று. விஜயின் அரசியல் செயல்பாடுகள், கொள்கை விளக்கத்தைவிட உளவியல் தாக்கத்தை அதிகம் ஏற்படுத்துகின்றன. அவர் பேசும் ஒவ்வொரு மேடை உரையும், சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்படுகிறது. ஆதரவாளர்கள் மட்டுமல்ல, எதிர்ப்பாளர்களும் அவரது பேச்சை கவனிக்கிறார்கள். “அடுத்ததாக அவர் என்ன செய்யப்போகிறார்?” என்ற ஆர்வம், அவரை அரசியல் மையமாக மாற்றுகிறது.
இந்த ஆர்வமே, அவருக்கு இலவச விளம்பரமாக செயல்படுகிறது. அரசியல் எதிரிகள் விமர்சனம் செய்தாலும், அது கூட அவரது அடையாளத்தை பெருக்குகிறது. ஒரு அரசியல் தலைவர் மீது விமர்சனம் அதிகரிக்கும்போது, அவர் முக்கியமானவர் என்ற எண்ணமும் பொதுமக்களிடம் வலுப்பெறுகிறது. இந்த உளவியல் அரசியலை, பாரம்பரிய கட்சிகள் எளிதில் எதிர்கொள்ள முடியாமல் தவிக்கின்றன. இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது, விஜய் இன்னும் முழுமையான கொள்கையை வெளியிடவில்லை. இருந்தாலும், அவரது பெயர் அரசியல் விவாதங்களின் மையமாக மாறியுள்ளது.
இது கொள்கை அரசியலைவிட, பிம்ப அரசியல் எவ்வளவு சக்திவாய்ந்ததாக மாறியுள்ளது என்பதற்கான உதாரணம். அதனால்தான் திமுக மற்றும் அதிமுக, விஜயின் அரசியல் திட்டங்களை விட, மக்களை காக்க வந்த ரட்சகர் என்ற பிம்பம் மக்களிடையே சென்றுள்ளதே, இது உண்மையா? பொய்யான பிம்பமா? என்பது குறித்து கவலையை உண்டாக்கி உள்ளது.
கொள்கைகளை விமர்சிக்கலாம். நிர்வாக அனுபவத்தை கேள்வி எழுப்பலாம். ஆனால் மக்களின் நம்பிக்கை, எதிர்பார்ப்பு, உணர்ச்சிகளைக் கொண்ட ஒரு உருவத்தை உடைப்பது கடினம். அண்ணாவின் மறைவுக்கு பிறகு, கருணாநிதியை ஆட்சி கட்டிலில் உட்கார வைத்த எம்ஜிஆர் எப்படியொரு உணர்ச்சிகர சக்தியோ, அதுபோல விஜயும் இருப்பாரோ என்ற கேள்வியை திமுக, அதிமுக போன்ற தமிழகத்தின் பிரதான கட்சிகளிடையே கலக்கத்தை உண்டாக்கி இருக்கிறது. 2026 தேர்தலை நோக்கி நகரும் தமிழக அரசியலில், விஜய் இந்த பிம்பத்தை வாக்குகளாக மாற்றுவாரா என்பதே, அடுத்த அரசியல் கட்டத்தை தீர்மானிக்கும் முக்கிய கேள்வி மாறியுள்ளது.