தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து, குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தாலும், மற்ற அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்று நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்கள், இங்கு அழகிய மலை தொடர்கள், சாரல் மழை, தென்றல் காற்று, அருவிகளில் குளியல் பார்டர் பரோட்டா என அனுபவிப்பதற்காக சுற்றுலா பயணிகள் கூடுவார்கள். அந்த வகையில் கோடை விடுமுறைக்காக குற்றாலத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்த மக்களுக்கு வெயிலின் தாக்கம் அதிர்ச்சியை அளித்தது.
கடந்த இரண்டு மாத காலங்களாக தென்காசி மாவட்டத்தில் கொளுத்திய கோடை வெயிலின் தாக்கத்தின் காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் வறண்ட நிலையிலே காணப்பட்டு வந்தன.
24
குற்றால அருவிகளில் கொட்டும் தண்ணீர்
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்து வறண்ட நிலையிலே காணப்பட்டு வந்தன. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் குற்றாலத்தில் சீசன் தொடங்கவுள்ளது.
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் சாரல் மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு தற்போது தண்ணீர் வர தொடங்கியுள்ளது.
34
மெயின் அருவியில் குளிக்க தடை
இந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களாக தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக நேற்று முதல் குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்ட தொடங்கிய நிலையில் தற்போது குற்றாலம் மெயின் அருவியில் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளன. குறைந்த அளவே குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் கொட்டி வரும் நிலையிலும், மலைப்பகுதிகளில் மழையானது தொடர்ந்து பெய்து வருவதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடையானது விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மழை குறைந்த உடன் உடனடியாக குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற அருவிகளான ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் வழக்கம் போல் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே குற்றாலத்திற்கு சுற்றுலா செல்லலாமா என திட்டமிட யோசிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு தற்போது குற்றாலம் செல்ல நல்ல சான்ஸ் ஆகும்.