அரசியல் கணக்குப்படி பார்த்தால் இது நேரம் பார்த்த அறிவிப்பு என்பதில் சந்தேகம் இல்லை. கடந்த மாதம் வரை தகுதியற்றவர்கள் என கூறப்பட்ட பெண்கள், தேர்தல் நெருங்கியதும் திடீரென தகுதி பெற்றது எப்படி? சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து பெண்களின் பாதுகாப்பே கேள்விக்குறியாக இருக்கும் நிலையில், பணம் கொடுத்தால் ஓட்டு கிடைத்துவிடும் என்ற எண்ணமா? என்கிறார் நயினார்.
“வலையை விரித்து இரையைப் பிடிப்பது போல, தேர்தல் நேரத்தில் பணத்தாசை காட்டி பெண்களை ஓட்டு வங்கியாக மாற்ற நினைப்பது அரசியல் நியாயமா?” என்ற அவரது கேள்வி, சாமானிய மக்களின் மனதில் ஏற்கனவே இருக்கும் சந்தேகத்தையே பிரதிபலிக்கிறது. பெண்கள் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, கல்வி, சட்டம் ஒழுங்கு போன்ற அடிப்படை பிரச்சினைகளில் தீர்வு இல்லாத நிலையில், வெறும் ரூ.1000 கொடுத்து “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என விழா எடுப்பது அரசியல் நாடகமே என அவர் சாடுகிறார்.
மொத்தத்தில், இந்த உரிமைத்தொகை விவகாரம் இனி வெறும் திட்டமாக இல்லாமல், திமுகவுக்கு எதிரான அரசியல் ஆயுதமாக மாறியுள்ளது. “உருட்டு இனி எடுபடாது” என்ற நயினார் நாகேந்திரனின் வார்த்தைகள், வரும் தேர்தலில் பெண்கள் வாக்குகளில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதை அரசியல் களம் கூர்ந்து கவனித்து வருகிறது.