தூத்துக்குடி விவசாயி மகன் கவின்குமார், காதலித்த பெண்ணின் சகோதரரால் கொலை செய்யப்பட்டார். கொலைக்கு தூண்டுதலாக இருந்ததாக பெண்ணின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயி சந்திரசேகர். இவரது மகன் கவின்குமார் (26). சென்னையில் ஐடி ஊழியராக பணியாற்றி இவர் திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த போலீஸ் தம்பதியினரான சரவணன்- கிருஷ்ணகுமாரியின் மகளை காதலித்து வந்தார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டார் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
25
ஆணவக்கொலை
இந்நிலையில் தாத்தா செல்லத்துரையை பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கவின் கடந்த 27ம் தேதி அழைத்து வந்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீஸ் தம்பதியின் மகன் சுர்ஜித் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கவினை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார். இதனையடுத்து சுர்ஜித் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த கொலைக்கு தூண்டுதலாக இருந்ததாக போலீஸ் தம்பதியான சரவணன்- கிருஷ்ணகுமார் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் சிறப்பு காவல் படை எஸ்.ஐ சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
35
உடுமலை கௌசல்யா
இந்நிலையில் என்ன ஆனாலும் நீங்கள் கவின் பக்கம்தான் நிற்க வேண்டும் என உடுமலை கௌசல்யா கவினின் காதலிக்கு ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். இதுதொடர்பாக உடுமலை சங்கரின் மனைவி கௌசல்யா அவரது முகநூல் பதிவில்: தோழி சுபாஷிணிக்கு, வணக்கம். நான் கெளசல்யா எழுதுகிறேன். முதலில் எனது வேண்டுகோள் : என்ன ஆனாலும் நீங்கள் கவின் பக்கம்தான் நிற்க வேண்டும். இங்கு கொலையுண்டு கிடப்பது நீங்கள் நேசித்த, கரம் பிடித்த, கை கோர்த்து நடந்த காதலன்! நீங்கள் அழைத்ததற்காகத்தான் கவின் உங்கள் தம்பியிடம் பேச சென்றிருப்பான்! கவினுக்கான நீதியின் பக்கம் நீங்கள் உறுதியாக நிற்க வேண்டும்! அப்படிச் செய்தால் என் வாழ்க்கை என்ன ஆகும் என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். அதை என்னால் புரிந்து கொள்ள இயலும்.
நான் என் சங்கரை இழந்த பின்பு யாரும் இல்லாத அனாதை போலவே நின்றேன். ஒவ்வொரு பெரியாரிய அம்பேத்கரியத் தோழர்களும் அவர்களின் பிள்ளையைப் போல் என்னை அரவணைத்துக் கொண்டனர். இன்று வரை(10 ஆண்டு ஆகப் போகிறது) சாதியைத் தூக்கிப் பிடித்த குடும்பத்துடன் எந்த உறவும் இல்லாமல் என்னால் வாழ முடிகிறது. அதற்குத் தோழர்கள் என்னை தங்கள் மகளாக பார்த்து கொண்டு என் சுயமரியாதையுடன் சொந்த காலில் நிற்க இன்று வரை உடன் இருக்கின்றனர்! எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் நீதியின் பக்கம் என் காதலின் பக்கம் என்னால் உறுதி குலையாது வாழ முடிகிறது ! காரணம் சங்கரின் வழக்கில் எந்த இடத்திலும் நான் பொய் சொல்லவில்லை! சமரசம் இப்போது வரை செய்து கொள்ள வில்லை ! இனியும் செய்து கொள்ள மாட்டேன்.
55
கவினின் காதலி
நான் தொடக்கத்தில் சந்தித்த நெருக்கடிகள் பெரிது. என்னைப் போல் உன்னையும் சாதி வெறியர்கள் பற்றிக் கொள்வார்கள்! எவராக இருந்தாலும் என்ன அழுத்தம் தரப்பட்டாலும் உன் கவினுக்காகத் துணிவோடு நில்! உன் பக்கம் நான் இருக்கிறேன்; நாங்கள் இருக்கிறோம்! நடந்ததை அப்படியே சட்டத்தின் முன் சொல்ல வேண்டும்! நீ கவினின் காதலுக்கு நேர்மையாக இருப்பாய் என்பதை உணர்வேன். கவினின் உயிருக்கு விடை எடுத்தாக வேண்டும். கவினுக்காக மட்டுமல்ல கவின்களுக்காகவும் உன்னிடம் இறைஞ்சுகிறேன். தோழி! எல்லாவற்றையும் தாண்டி நான் இருக்கிறேன். கவினின் நீதிக்கு நானும் உன்னோடு இணைந்து கொள்கிறேன். வா ! எதற்கும் அஞ்சாதே! உன்னைத் தாங்கிக் கொள்ள நான் இருக்கிறேன்; நாங்கள் இருக்கிறோம் என தெரிவித்துள்ளார். கௌசல்யா, சங்கர் ஆணவக் கொலை வழக்கில் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.