கோயம்பேடு சந்தையில் தக்காளி வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது. மழை மற்றும் வெயில் காரணமாக செடியிலேயே தக்காளி வெம்பி விடுவதால் வரத்து குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மற்ற காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது.
சமையலுக்கு ருசியை கொடுப்பது காய்கறிகள் தான், காய்கறிகள் இல்லாமல் சமையல் என்பது சிரமமான காரியம் தான். ஏதாவது ஒரு காய்களாவது சமையலுக்கு தேவைப்படும். அதிலும் தக்காளி மற்றும் வெங்காயம் இல்லாமல் சமையலை நினைத்துக்கூட பார்க்கமுடியாது. காய்கறி சந்தையில் எந்த காய்களை வாங்குகிறார்களோ இல்லையோ கண்டிப்பாக தக்காளி மற்றும் வெங்காயத்தை மக்கள் பை நிறைய வாங்குவார்கள்.
இந்தநிலையில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை புதிய புதிய உச்சத்தை தொட்டது. ஒரு கிலோ தக்காளி 150 ரூபாயை தாண்டியது. வெங்காயத்தின் விலையும் இதற்கு ஏற்ப போட்டி போட்டு உயர்ந்தது. இதனால் நடுத்தர வர்க்க மக்களின் மாத பட்ஜெட்டில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது.
25
உயர தொடங்கிய தக்காளி மற்றும் வெங்காயம் விலை
இதனையடுத்து காய்கறி சந்தைக்கு தக்காளி மற்றும் வெங்காயத்தின் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து விலையானது சரிய தொடங்கியது. ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்பனையானது. வெங்காயத்தின் விலையும் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு சரிந்தது. கடந்த சில மாதங்களாக இந்த விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட வந்த நிலையில் தற்போது மீண்டும் தக்காளி விலை உயர தொடங்கியுள்ளது.
கடந்த வாரம் ஒரு கிலோ 10 முதல் 15 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி விலை மொத்த காய்கறி சந்தையில் ஒரு கிலோ 35 முதல் 40 ரூபாய்க்கும் சில்லரை வர்த்தகத்தில் 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
35
குறைந்தது தக்காளி வரத்து
இந்த நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நாள் தோறும் 60 முதல் 90 லாரிகளில் தக்காளி வரத்து வந்து கொண்டிருந்த நிலையில் கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக 60 வண்டிகளுக்கு பதிலாக 15 வண்டிகள் குறைந்து 45 லாரிகள் மட்டுமே வந்துள்ளது. இதன் காரணமாக தக்காளி விலை அதிகரித்துள்ளது. மேலும் மழை மற்றும் வெயில் என சூழ்நிலை மாறி வருவதால் செடியிலேயே தக்காளி வெம்பி விடுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதே போல பச்சை காய்களிகளின் விலையும் உயர்ந்துள்ளது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 25 முதல் 35 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 30 முதல் 45 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 45ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
55
பச்சை காய்கறிகளின் விலை நிலவரம்
முட்டைக்கோஸ் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 25 க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 70 க்கும், இஞ்சி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.