Published : Oct 09, 2024, 08:32 PM ISTUpdated : Oct 09, 2024, 08:33 PM IST
TNPSC Group 4 Exam: தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப் 4 தேர்வில் 2,208 காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மொத்த காலிப்பணியிடங்கள் 8,932 ஆக உயர்ந்துள்ளது. தேர்வு முடிவுகள் அக்டோபர் 2வது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையிர் 2024ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 30ம் தேதி வெளியாகி, ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் 28ம் தேதி வரை பெறப்பட்டது. 6,244 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு ஜூன் 9ம் தேதி நடைபெற்றது.
24
TNPSC Group 4 2024
அதன்படி கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், தனி உதவியாளர், கிளார்க் என பல பணிகளுக்கு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் தமிழகம் முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் மொத்தம் 15.8 லட்சம் பேர் குரூப் 4 தேர்வை எழுதியுள்ளனர். குரூப் 4 தேர்வுகளை பொறுத்த வரை நேர்முகத்தேர்வு இல்லை. இந்த எழுத்து தேர்வில் உரிய கட் ஆஃப் மதிப்பெண்ணை பெற்றால் ஆவண சரிபார்ப்புக்கு பின் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கப்படும்.
இந்நிலையில் குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் 2வது வாரத்தில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனிடையே கடந்த செப்டம்பர் 11ம் தேதி 480 காலியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், காலி பணியிடங்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று தேர்வர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் காலிப் பணியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதை முதல்வர் மு.க.ஸ்டாலினும் உறுதிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், குரூப் 4 தேர்வு பிரிவில் 2,208 காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 6,704லிருந்து 8,932ஆக உயர்ந்துள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு தேர்வர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. எனினும் இந்த தேர்வுக்கான கட் ஆஃப் மதிப்பெண்ணை டிஎன்பிஎஸ்சி இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் கட் ஆப் மதிப்பெண் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.