Tirupur Crime News: மாது செல்போனில் நீண்ட நேரம் பேசியதால் ஆத்திரமடைந்த இளங்கோவன், அவரை குழவிக்கல்லால் தாக்கிக் கொலை செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வீரபாண்டி போலீசார் இளங்கோவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பழவஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (40). இவர் கழிவு நீர் அகற்றும் லாரியில் கிளீனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி, குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து இளங்கோவன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் இளங்கோவனுக்கும், திருப்பூர் அரசு மருத்துவமனை முன்பு சாலையோரம் தங்கி இருந்த மாது (35) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
24
கள்ளக்காதல்
இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. பின்னர் இளங்கோவன் தான் குடியிருக்கும் வீட்டுக்கு மாதுவை அழைத்து சென்று அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதனிடையே மாது அடிக்கடி செல்போனில் நீண்ட நேரம் வேறு ஒருவருடன் பேசி வந்துள்ளார். இதனால் இளங்கோவன் கடுப்பானார். இதனைய மாதுவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக கூறி இளங்கோவன் அவ்வப்போது அவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 26-ம் தேதி இரவு மாதுவை வீட்டிற்கு இளங்கோவன் அழைத்து சென்று உல்லாசமாக இருந்தார். பின்னர் வேலை முடிந்ததும் செல்போனில் யாரிடம் பேசுகிறாய்? என கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.
34
குழவிக்கல்லால் தாக்கிய லாரி கிளீனர்
இதனால் ஆத்திரமடைந்த இளங்கோவன் வீட்டில் இருந்த குழவிக்கல்லால் மாதுவின் முகத்தில் சரமாரியாக குத்தியதால் ரத்த வெள்ளத்தில் மயங்கினார். கள்ளக்காதலியை அப்படியே விட்டுவிட்டு இளங்கோவன் வெளியே சென்றுவிட்டார். பின்னர் மறுநாள் காலையில் வந்து பார்த்த போது மூச்சு பேச்சு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
அங்கு முகம் சிதைந்த நிலையில் மாதுவை பார்த்து அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து வீரபாண்டி காவல் நிலையத்துக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளங்கோவனிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாது செல்போனில் நீண்ட நேரம் வேறு ஒருவருடன் பேசியதால் ஆத்திரத்தில் குழவிக்கல்லால் தாக்கி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து இளங்கோவனை கைது செய்தனர்.