
Thirumavalavan DMK alliance தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் திமுக கூட்டணியின் முக்கிய கட்சியாக இருப்பது விடுதலை சிறுத்தைகள் கட்சி, எனவே தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணி தொடர்பாகவும். தொண்டர்களின் வற்புறுத்தலால் நெருக்கடிக்கு ஆளாவதையும் திருமாவளவன் வேதனையோடு தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் தொண்டர்களுக்கு முகநூல் மூலமாக திருமாவளவன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர். கட்சி நிர்வாகிகள் கட்டாயப்படுத்தி தாங்கள் ஏற்பாடு செய்துள்ள விழாக்களில் பங்கேற்க வைப்பது மன அழுத்தத்தை தருவதாக தெரிவித்தார்.
தொண்டர்களின் அழுத்தம்
ஒருநாள் கூட எனக்கு ஓய்வு இல்லை, ஒரு மணி நேரம் கூட எனக்கு தனிமை இல்லாத நிலையில் இருப்பதாக கூறினார். மஞ்சள் நீராட்டு, திருமண நிகழ்ச்சிகளுக்கும் அழுத்தம் கொடுத்து அழைத்து செல்வதில் நமது கட்சியினர் குறியாக இருக்கிறீர்கள். 24 மணி நேரமும் உங்களுடன் இருக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை.
ஆனால் கட்சி பணிகளை என்னால் மேற்கொள்ள முடியவில்லை என கூறினார். இதனைதொடர்ந்து கூட்டணி தொடர்பாக பேசிய அவர், திமுக தலைமையிலான கூட்டணி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நாம் கருத்துகளை முன் வைப்பதால் விடுதலை சிறுத்தைகளுக்கு எதிரான அவதூறுகளை பரப்புகிறார்கள்.
திமுகவை மட்டுமே நம்பி விடுதலை சிறுத்தைகள் கட்சி
ஏதோ திமுகவை மட்டுமே நம்பி விடுதலை சிறுத்தைகள் கட்சி இருப்பதை போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க சிலர் முயற்சி செய்வதாக தெரிவித்தவர், இந்த கருத்தை நாம் கடந்து சென்றாலும் இந்த விவகாரத்தில் இயக்க தோழர்கள் தெளிவு பெற வேண்டும். தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் நம்மால் எடுக்க முடியும்.
அது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம் இல்லையெனும் தெரிவித்தார். எல்லா கதவுகளையும் திறந்து வைத்திருப்பது, கூடுதலாக பணம் கிடைக்கும் இடத்தில் உறவு வைத்துக் கொள்வது, ஒரே நேரத்தில் பலரோடு பேரம் பேசுவது, கூட்டணியை தீர்மானிப்பது போன்ற விஷயங்கள் ஒன்றும் ராஜ தந்திரம் இல்லையெனவும் விமர்சித்தார்.
சுயநலம் சார்ந்த சந்தர்ப்பவாத அரசியல்
அது சுயநலம் சார்ந்த சந்தர்ப்பவாத அரசியல். எந்த எதிர்பார்ப்பும், நிபந்தனையும் இன்றி ஒரு கூட்டணியில் தொடர்கிறோம் என்றால் அதற்கு ஒரு துணிச்சல் வேண்டும் என திருமாவளவன் தெரிவித்தார். இதனை புரிந்து கொள்ள முடியாதவர்கள் வாய் புளித்ததோ; மாங்காய் புளித்ததோ என்ற ரீதியில் நமக்கு எதிராக தகவல்களை தொடர்ந்து பரப்புகின்றனர்.
மற்ற கட்சிகளை போன்று அல்லாமல், முன்மாதிரியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி இயங்கி வருவதாகவும், இதனை காலம் சுட்டிக் காண்பித்து வருகிறது என அவர் கூறினார். எனவே யார் என்ன சொன்னாலும், அதற்கு எதிர் விணை கருத்தை சொல்லி அதில் நாம் சிக்கிக்கொள்ள கூடாது.
திமுகவின் கூட்டணியை பலவினப்படுத்த திட்டம்
அரசியல் தொடர்பான விவாதங்களில் தலைமையின் முடிவை அறிந்து கருத்து சொல்ல வேண்டும். அல்லது சொல்லாமல் தவிர்க்கலாம் என திருமாவளவன் தெரிவித்தார். தேர்தலுக்கு ஒரு வருடம் கூட இல்லை. ஒரு சில மாதங்களில் கூட்டணி தொடர்பாக விவாதம் எழும். இந்த நிலையில் அவர்களின் முதல் நிலைப்பாடு திமுகவின் கூட்டணியை பலவினப்படுத்த வேண்டும்.
அதற்கு அவர்களுக்கு இருக்கும் ஓரே துருப்பு சீட்டு தான். விசிகவில் ஆர்வமாக இருப்பவர்களை தூண்டி விட்டால், விவாதங்களுக்கு உட்படுத்தி, கருத்துக்களை வாங்கி குழப்பத்தை ஏற்படுத்த முயல்வார்கள். எனவே தொண்டர்கள் உஷாராக இருக்க வேண்டும்.
கட்சியினர் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும்
ஆளும் கட்சியோடு இருக்கும் முரண் என்பது வேறு, கூட்டணி தொடர்பாக நாம் கையாளும் உத்தி என்பது வேறு. ஆளும் கட்சியோடு நாம் வைக்கும் கோரிக்கை வேறு. திமுக உடன் நாம் வைத்திருக்கும் கூட்டணி உறவு என்பது வேறு. இதனை நாம் புரிந்து கொண்டு கவனமாக இயங்க வேண்டும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சியினர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என திருமாவளவன் கேட்டுக்கொண்டார்.