
தமிழக அரசு மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு உதவித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6-12ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளிகளில் 6-12ஆ ம் வகுப்பு பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை கிடைக்கிறது. நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்களின் திறன் மேம்பாடு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி மற்றும் நிதியுதவி வழங்கி வருகிறது.
மேலும் கல்வி உதவித்தொகை திட்டங்களாக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு, ஆண்டு வருமானம் 2,00,000 ரூபாயையை தாண்டாத குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கி ஊட்டச்சத்து வழங்கிடும் வகையில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாடநூல்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், புத்தகப்பை, கணித உபகரணங்கள், வண்ணப் பென்சில்கள் மற்றும் கிரையான்கள் வழங்கப்படுகிறது.
மேலும் அரசுப் பள்ளிகளில் 6-12ஆம் வகுப்பு தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் போன்ற உயர்கல்வி படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பபட்டு வருகிறது. இதன் மூலம் பல ஆயிரம் மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள். இல்லம் தேடி கல்வி திட்டத்தில் இடைநிற்றலைத் தடுக்க, பள்ளி செல்ல முடியாத மாணவர்களுக்கு வீடு தேடி கல்வி வழங்கப்படுகிறது.
இவை தவிர, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை, திறன் மேம்பாட்டு பயிற்சி, மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் கட்டணம் செலுத்துதல் போன்ற திட்டங்களும் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையுடன் நடத்தப்படும் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டம் தமிழ் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் தமிழ் முனைவர் பட்ட வகுப்பு ஆகியன ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப்பெற்று வருகின்றது. 2025-26ஆம் கல்வியாண்டில் தற்போது ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்ட வகுப்பிற்கான சேர்க்கை நடைப்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தமிழ் முதுகலைப் பட்ட மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்பெறவுள்ளது. இந்த வகுப்பில் சேர்க்கைப்பெறும் மாணவர்களுள் தேர்வின் அடிப்படையில் 15 மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ.2000/- கல்வி உதவித் தொகை திங்கள்தோறும் வழங்கப்படும்.
மேற்கண்ட படிப்பில் பயில விரும்புவோர் சேர்க்கைத் தொடர்பான விதிமுறைகள் /தகவல்கள் மற்றும் விண்ணப்பத்தை www.ulakaththamizh.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து தெரிந்துக் கொள்ளலாம் அல்லது நேரில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் இருபாலருக்கான தனித்தனி கட்டணமில்லா விடுதி வசதி உள்ளது. விடுதியில் உள்ள ஒழிவிடங்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப முதலில் வருபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் விடுதி அறைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இறுதியாகப் படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச்சான்றிதழ் (சான்றொப்பமிடப்பட்டது) நகலுடன் இணைத்து நேரில் (அ) அஞ்சலில் இயக்குநர் (கூ.பொ.). உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600113 (தொலைபேசி 044-22542992) என்ற முகவரியில் 04.07.2025 வெள்ளிக் கிழமைக்குள் சமர்ப்பித்திட வேண்டும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.