Encounter : ரவுடி திருவேங்கடத்தை என்கவுன்டர் செய்தது ஏன்.? காவல்துறை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை

First Published Jul 14, 2024, 4:19 PM IST

ஆம்ஸ்ட்ராங்க கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள திருவேங்கடத்தை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். இந்தநிலையில் திருவேங்கடத்தை போலீசார் சுட்டது ஏன் என அறிக்கை வெளியிட்டுள்ளனர். 
 

பழிக்கு பழிவாங்க ஆம்ஸ்ட்ராங் கொலை

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 11பேரை கைது செய்திருந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்திருந்தனர். இந்தநிலையில் இன்று காலை ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளி திருவேங்கடத்தை விசாரணைக்காக அழைத்து செல்லும் போது தப்பித்து சென்றுள்ளார். 

தப்பிய திருவேங்கடம்

இதனையடுத்து அவரை போலீசார் சுட்டு பிடித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த என்கவுன்டர் தொடர்பாக சென்னை மாநக போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   கடந்த 05.07.2024 அன்று, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52 வயது) கொலை செய்யப்பட்டார். 

இது தொடர்பாக K-1 செம்பியம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், திருவேங்கடம். ໙/33, த/பெ.கண்ணன், குன்றத்தூர், சென்னை உட்பட 11 நபர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். 

Latest Videos


கொலை-வழிப்பறி

மேற்படி கைது செய்யப்பட்ட திருவேங்கடம் உட்பட 11 நபர்கள் விசாரணைக்காக போலீஸ் காவலில் எடுக்கப்பட்டனர். இவர் மேற்கண்ட கொலை வழக்கு தவிர இரண்டு கொலை வழக்குகள் மற்றும் வழிப்பறி, கொடுங்காய வழக்கு ஆகிய ஐந்து வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்று 14.07.2024 தேதி அதிகாலை, போலீஸ் காவலில் இருந்த எதிரி திருவேங்கடத்தை மேற்கண்ட வழக்கில் சம்பந்தப்பட்ட ஆயுதங்களை கைப்பற்ற எதிரி தங்கியிருந்த மணலியில் உள்ள வீட்டிற்கு தக்க பாதுகாப்புடன் அரசு வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டார். 

போலீசை சுட்ட திருவேங்கடம்

அவ்வாறு அழைத்து செல்லும்போது, இயற்கை உபாதைக்காக ரெட்டேரி ஏரிக்கரை ஆட்டு மந்தை செல்லும் வழியில் போலீஸ் வாகனத்தை நிறுத்தியபோது,  பாதுகாப்பில் இருந்த காவலர்களை தள்ளிவிட்டு எதிரி தப்பி ஓடிவிட்டார். உடனடியாக பாதுகாவலாக சென்ற காவலர்கள் அவரை பிடிக்க முயற்சித்தும் பிடிக்க இயலவில்லை. புழல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெஜிடேரியன் வில்லேஜ் என்ற இடத்தில் மறைந்திருந்த எதிரி திருவேங்கடத்தை பிடிக்க முயற்சித்தபோது, எதிரி தான் மறைத்து வைத்திருந்த கள்ளத்துப்பாக்கியை எடுத்து காவலர்களை நோக்கி சுட்டுள்ளார். 
 

Armstrong

என்கவுன்டரில் திருவேங்கடம் பலி

உடனடியாக காவல் ஆய்வாளர் எதிரி திருவேங்கடத்தை தற்காப்பிற்காக துப்பாக்கியால் சுட்டதில், காயமடைந்த எதிரி உடனடியாக மெரிடியன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது சம்பந்தமாக M3 புழல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை நீதிமன்ற நடுவர் விசாரணைக்காக அனுப்பப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#viralvideo ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை; சிசிடிவி காட்சிகள் வெளியானது

click me!