2019-ல், தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, கமலாத்தாளைப் பற்றி சமூக வலைதளத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்தார். அவரது சேவையால் ஈர்க்கப்பட்ட மஹிந்திரா, கமலாத்தாளின் பணிக்கு ஆதரவளிக்க விரும்புவதாகத் தெரிவித்திருந்தார். இது வெறும் சமூக வலைதளப் பாராட்டாக மட்டும் நின்றுவிடவில்லை. அதன்பிறகு, அவரது வாழ்க்கையில் உண்மையான மாற்றங்கள் வரத் தொடங்கின. கமலாத்தாளுக்கு ஒரு பாதுகாப்பான வீடு மட்டுமல்லாமல், அவர் தனது இட்லி தயாரிக்கும் வேலையைத் தொடர வசதியாக ஒரு வீடு மற்றும் வேலை செய்யும் இடத்தை கொடுக்க திட்டம் உருவாக்கப்பட்டது.
வீட்டுடன் ஒரு ஸ்பெஷல் கிச்சனும் கிடைத்தது
2021-ல் அவரது பெயரில் நிலம் பதிவு செய்யப்பட்டு, அவரது பழைய கடைக்கு அருகிலேயே வீடு மற்றும் வேலை செய்யும் இடத்தைக் கட்டும் திட்டம் தீட்டப்பட்டது. இறுதியாக, 2022 அன்னையர் தினத்தின்போது, கமலாத்தாளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சமையலறையுடன் கூடிய புதிய வீடு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. சமைப்பதற்கு வசதியாக எல்பிஜி சிலிண்டர் இணைப்பும் வழங்கப்பட்டது. ஆனால், புதிய வீடு கிடைத்துவிட்டது என்று கமலாத்தாள் தனது பழைய வேலையை நிறுத்தவில்லை.