Tamil Nadu Special Buses:பக்ரீத் மற்றும் வார இறுதி நாட்கள் என அடுத்தடுத்து தொடர் விடுமுறைகள் வருவதால்,பொதுமக்களின் பயணத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் நாளை முதல் வரும் 31ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விடுமுறை நாட்களை முன்னிட்டு தலைநகர் சென்னையிலிருந்தும், பிற முக்கிய நகரங்களிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பயணிகளின் வசதிக்காகவும் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்து, கூடுதலாகப் பல நூறு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
25
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
இங்கிருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், நாகர்கோவில், சேலம் மற்றும் ஈரோடு உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு நாளை (செவ்வாய்) 475 பேருந்துகளும், நாளை மறுநாள் (புதன்) 845 பேருந்துகளும் இயக்கப்படும். மேலும், மே 28 முதல் மே 30 வரை நாள்தோறும் தலா 455 சிறப்பு பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
35
கோயம்பேடு பேருந்து நிலையம்
இங்கிருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு நாளை 80 பேருந்துகளும், மே 27 முதல் 30 வரை தினமும் 170 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
45
பிற பேருந்து நிலையங்கள்
மாதாவரம் பேருந்து நிலையம்: இங்கிருந்து நாளை 35 பேருந்துகளும், மே 27 முதல் 30 வரை நாள்தோறும் தலா 60 பேருந்துகளும் இயக்கப்படும்.
பிற முக்கிய நகரங்கள்: பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் போன்ற நகரங்களுக்கு இடையே பயணிகளின் வசதிக்காக 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
மறுபயணம் (ரிட்டர்ன் வசதி): விடுமுறை முடிந்து பொதுமக்கள் மீண்டும் சென்னை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களுக்குத் திரும்ப வசதியாக, மே 31 ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டும் பல்வேறு ஊர்களில் இருந்து 1,085 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
55
முன்பதிவு செய்ய அறிவுறுத்தல்
இந்தத் தொடர் விடுமுறைப் பயணத்திற்காக இதுவரை லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் ஏற்கனவே தங்களது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளனர். வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதால், கடைசி நேரக் கூட்ட நெரிசலைத் தவிர்க்க விரும்பும் பயணிகள் www.tnstc.in என்கிற இணையதளம் அல்லது அதிகாரப்பூர்வ மொபைல் ஆப் (Mobile App) மூலமாக தங்களது பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து கொள்ளுமாறு போக்குவரத்துத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
பொதுமக்களின் தடையற்ற பயணத்திற்கு உதவவும், இந்தச் சிறப்பு பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்கவும் அனைத்து முக்கிய பேருந்து நிலையங்களிலும் போதிய எண்ணிக்கையிலான போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.