Published : Sep 20, 2024, 01:03 PM ISTUpdated : Sep 20, 2024, 01:41 PM IST
Tamilnadu Government: தமிழக அரசு மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், பிஎச்டி படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும்.
தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், 5ம் வகுப்பு வரை 2,000, 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 6,000, 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 8,000, பட்டப்படிப்புக்கு 12,000, முதுகலை பட்டத்திற்கு 14,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. நடப்பாண்டு முதல் முதல்வரின் ஆராய்ச்சி உதவித்தொகை என்ற புதிய திட்டத்தின் கீழ், பிஎச்டி., படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவருக்கு, ஒரு லட்சம் ரூபாய் வீதம், 50 மாணவர்களுக்கு நிதியுதவி வழங்க தமிழக அரசு 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாற்றுத்திறனானிகள் நலத்துறை செயலாளர் சிஜி தாமஸ் வைத்யன் வெளியிட்டுள்ள உத்தரவில்: மாற்றுத்திறனாளி மாணவா்களின் சிறப்புக் கல்வியினை ஊக்குவிக்கும் பொருட்டு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தினை விரிவுப்படுத்தி ஆராய்ச்சி படிப்பு பி.எச்டி. மேற்கொள்ளும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கும் ஆண்டுதோறும் ரூ.1,00,000 வீதம் 50 மாணவா்கள் பயன்பெறும் வகையில் ரூ. 50,00,000 நிதி ஒதுகீட்டில் முதல்வரின் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டம் (Chief Minister's Research Fellowship)செயல்படுத்தப்படும்.
34
Differently- Abled Students
திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகள்
அதன்படி, முழுநேர அல்லது பகுதி நேர ஆராய்ச்சி படிப்பு(Ph.D.,) பயிலும் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு மட்டுமே உதவித் தொகை வழங்கப்படும். வருமான உச்சவரம்பு ஏதுமில்லை. இந்தியாவிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றில் முழுநேர அல்லது பகுதி நேர ஆராய்ச்சிப் படிப்பு பயில்பவராக இருக்க வேண்டும். ரூ.1 லட்சம் ஊக்கத்தொகையானது ஆராய்ச்சிப் படிப்புக்கான, ஆய்வறிக்கை வாய்மொழி தேர்வு தேதி வழங்கப்பட்டதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்தவுடன் இத்தொகை முழுவதுமாக அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் மூலம் நேரடியாக மாற்றுத்தினாளி மாணவர்களின் வங்கிக் கணக்கில் ECS மூலமாக செலுத்தப்படும்.
ஆராய்ச்சிப் படிப்பு பயிலும் மாணவர்கள் தங்களது விண்ணப்பத்துடன், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை அல்லது தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, ஆதாா் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், முழுநேர அல்லது பகுதி நேர ஆராயச்சிப் படிப்பு பயில்வதற்கான உரிய பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் இருந்து பெற்ற ஆராய்ச்சி படிப்புக்கான ஆய்வறிக்கை வாய்மொழி தேர்வு தேதி வழங்கப்பட்டதற்கான ஆதாரம் மற்றும் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டதற்கான இருப்பிடச் சான்று ஆகியவற்றை சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.