TN Alert: இனி மழை, வெள்ளம் குறித்து கவலை வேண்டாம்! தமிழக மக்கள் முன்கூட்டியே அறிய புதிய செயலி!

First Published Oct 4, 2024, 2:22 PM IST

TN Weather Updates App: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வானிலை முன்னறிவிப்புகளை மக்களுக்கு வழங்க TN-Alert என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பருவமழை தொடங்க உள்ள நிலையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. கடந்த முறை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் இந்த முறையும் நடந்துவிடக்கூடாது என்ற முடிவில் அரசு உறுதியாக இருக்கிறது. இந்நிலையில் அக்டோபர் மாதம் மத்தியில் தொடங்கும் மழை டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் வரை நீடிக்கும். இந்நிலையில் மழையின் பாதிப்பு தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் சென்னையில் கடந்த 30ம் தேதி நடைபெற்றது. இதில், அமைச்சர்கள், ஐஏஎஸ் உள்ளிட்ட முக்கிய துறையை சேர்ந்த நிர்வாகிகள்  பங்கேற்றனர். 

அப்போது கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,  தென்மேற்கு மற்றும் வடகிழக்கு என இரண்டு பருவ காலங்களில் தமிழ்நாட்டிற்கு மழை கிடைக்கிறது. முன்பெல்லாம் வடகிழக்கு பருவமழையானது பருவம் முழுவதும் பரவலாக பெய்து கொண்டிருந்தது.  சமீப காலமாக காலநிலை மாற்றத்தால், சில நாட்களிலேயே மொத்தமாகப் பெய்து விடுகிறது என கூறினார். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழைக் காலத்தில், சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத பெருமழை பெய்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். எனவே  இந்த ஆண்டும் பேரிடர்களின் தாக்கத்தினை திறம்பட எதிர்கொள்ள தேவையான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

Latest Videos


சரியான நேரத்தில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் வானிலை முன்னெச்சரிக்கையினால் நாம் பெரிய அளவிலான சேதங்களை தவிர்க்க முடியும் என தெரிவித்தார். பேரிடர்களை எதிர்கொள்வதில், முன்னெச்சரிக்கை தகவல்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால்,  அரசு அதற்கு தேவையான உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் தனிக்கவனம் செலுத்தி வருகிறது. அதற்காக வானிலைத் தரவுகளை உடனுக்குடன் வழங்க  தரம் உயர்த்தப்பட்ட மாநில அவசரகால செயல்பாட்டு மையம் திறந்து வைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

பெய்த மழையின் அளவு எவ்வளவு? என்பதை அது பெய்கின்ற நேரத்தில் தெரிந்தால்தான், அணைகளில் நீர் திறப்பு மேலாண்மை, வெள்ள முன்னெச்சரிக்கை தகவல்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் சரியாகச் செய்ய முடியும். இந்த தகவல்கள் பொதுமக்களுக்கும் அவ்வப்போது கிடைத்தால் அவர்கள் தங்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திட்டமிட வசதியாக இருக்கும் என்பதால்தான் தமிழக அரசு சார்பில் TN-Alert என்னும் கைப்பேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்  பொதுமக்களுக்கான TN-Alert என்னும் கைப்பேசி செயலியை சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் வெளியிட்டார். TN-Alert செயலி, பொதுமக்கள் எளிய முறையில் இயக்கக் கூடிய வானிலை செயலியாக உள்ளது. இச்செயலியின் மூலம் தம் இருப்பிடம் சார்ந்த வானிலை மற்றும் முன்னெச்சரிக்கை செய்திகளை பொதுமக்கள் தமிழிலேயே அறிந்து கொள்ளலாம். இந்த செயலியில் அடுத்த நான்கு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு, மழைமானி வாரியான தினசரி பெறப்பட்ட மழை அளவு, நீர்த்தேக்கங்களின் தற்போதைய நீர் இருப்பு விவரம், தங்களது இருப்பிடம் வெள்ள அபாயத்திற்கு உட்பட்டதா போன்ற தகவல்களை அறிந்து கொள்ளும் வசதி உள்ளது.

பேரிடர் மற்றும் கனமழையின் காரணமாக பாதிப்பிற்குள்ளாகும் மக்கள் தங்களது புகார்களை பதிவு செய்யவும், மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும் இந்தச் செயலியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பேரிடர் குறித்த வானிலை முனனெச்சரிக்கையினை அறிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் பொதுமக்கள் ஆயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள உதவும் TN– Alert செயலியை, Google Play Store மற்றும் IOS App Store–ல் இருந்து பதிவிறக்கம் செய்து
பொதுமக்கள் பயனடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

click me!