தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளில், ஆன்லைன் முன்பதிவு திட்டத்தின் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சிறப்பு குலுக்கல் முறையில் 75 பயணிகளை தேர்வு செய்து சிறப்பு பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் பயணச்சீட்டு முன்பதிவு
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் தொலைதூர பயணம் மேற்கொள்ளும் பயணிகள் பயணச்சீட்டுகளை எளிதாக முன்பதிவு செய்யும் வகையில், ஆன்லைன் மூலம் பயணச்சீட்டு முன்பதிவு முறை (OTRS) உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பயணிகள் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் உட்பட 7 தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மூலம் பயணம் செய்து பயன் பெறுகின்றனர்.
மாதாந்திர குலுக்கல் முறையில் பரிசு
இந்த முன்பதிவு முறையானது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் இணையதளம், https://www.tnstc.in, மற்றும் TNSTC Mobile App வழியாக செயல்படுகிறது. தற்போது, பயணிகள் 90 நாட்கள் முன்னரே முன்பதிவு செய்யும் வசதியுள்ளது. தினசரி சுமார் 20,000 இருக்கைகள் பயணிகளால் முன்பதிவு செய்யப்படுகின்றன. பொதுமக்களின் அமோக வரவேற்புடன் செயல்படுகின்ற இத்திட்டத்தினை மேலும் அதிக பயணிகள் பயன்பெறும் வகையில் பிரபலப்படுத்த 2024 ஜனவரி முதல், வார இறுதி நாட்கள், திருவிழாக்கள் மற்றும் சிறப்பு நாட்கள் தவிர்த்து இதர நாட்களில் பயணிக்க முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மாதாந்திர ‘குலுக்கல் முறை’ மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
மாதாந்திர குலுக்கல் முறை
அதனைத் தொடர்ந்து, 2024 நவம்பர் மாதம் முதல் வாரத்தின் அனைத்து நாட்களிலும் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் அனைத்து பயணச்சீட்டுகளும் மாதாந்திர குலுக்கல் முறைக்கு தகுதி பெறும் வகையில், இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, ஒவ்வொரு மாதமும் 13 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு தலா ரூ.10,000-மூம், மற்ற பத்து வெற்றியாளர்களுக்கு தலா ரூ.2,000-ம் வழங்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: தொடர்ந்து வரும் 4 நாள் விடுமுறை.! குஷியான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை
இலவச பயண சலுகை
மேலும், ஆன்லைன் முன்பதிவு திட்டத்தில் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், கடந்த 2024 நவம்பர் 21 முதல் 2025 ஜனவரி 20ம் தேதி வரை பயணம் செய்த 3 முன்பதிவு பயணிகள், ‘சிறப்பு குலுக்கல்’ முறையில், தேர்வு செய்யப்பட்டு உயர் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட உள்ளன. பொதுமக்கள் முன்பதிவு வசதியினை மேலும் அதிக அளவில் பயன்படுத்தும் வகையில் இந்தாண்டு கோடை காலத்திற்காக ஒரு சிறப்பு குலுக்கல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்புதிவு செய்து ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை பயணம் செய்யும் 75 பயணிகள் சிறப்பு குலுக்கல் முறையில், தேர்வு செய்யப்பட்டு இலவச பயண சலுகை பின்வருமாறு வழங்கப்படும்.
முன்பதிவு வசதி
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழப்பேருந்துகளில் முன்பதிவு வசதியுள்ள அனைத்து வகை பேருந்துகளிலும் முன்பதிவு செய்து ஒரு வருடத்திற்கு 20 முறை இலவச பயணம் (01/07/2025 முதல் 30/06/2026 வரை) 25 நபர்களுக்கு முதல் பரிசாகவும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழப்பேருந்துகளில் முன்பதிவு வசதியுள்ள அனைத்து வகை பேருந்துகளிலும் முன்பதிவு செய்து ஒரு வருடத்திற்கு 10 முறை இலவச பயணம் (01/07/2025 முதல் 30/06/2026 வரை) 25 நபர்களுக்கு இரண்டாம் பரிசாகவும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழப்பேருந்துகளில் முன்பதிவு வசதியுள்ள அனைத்து வகை பேருந்துகளிலும் முன்பதிவு செய்து ஒரு வருடத்திற்கு 5 முறை இலவச பயணம் (01/07/2025 முதல் 30/06/2026 வரை) 25 நபர்களுக்கு மூன்றாம் பரிசாகவும் வழங்கப்படவுள்ளது.
சிறப்பு பரிசுகள்
எனவே பொதுமக்கள், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள் மூலம் பயணம் செய்ய முன்பதிவு செய்து, கடைசி நேர சிரமங்களை தவிர்த்து எளிதாக பயணம் செய்யவும், மேற்கண்ட சிறப்பு பரிசுகளை வெல்லவும் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.