
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் முன்கூட்டியே 1 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வுகளை ஏப்ரல் 16ம் தேதி வரை நடத்தப்படுகிறது. ஏப்ரல் 17ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முழு ஆண்டு தேர்வு தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி 2025-26ஆம் கல்வியாண்டிற்கான முழு ஆண்டுத் தேர்வு / மூன்றாம் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டினை நடத்திட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்பட்டது. இத்தேர்விற்கான வினாத்தாள்களை அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் உரிய நேரத்தில் வழங்கி மதிப்பீட்டினை நடத்திடவும் நடுநிலைப் பள்ளிகளில் வினாத் தாள்களை பதிவிறக்கம் செய்து மதிப்பீட்டினை மேற்கொள்ளவும் பின்வரும் வழிகாட்டுதல்களை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.
* மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்கள் நிர்வாக எல்லைக்குட்பட்ட ஒன்றியங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கும் மாணவர்களின் வகுப்பு, பயிற்று மொழி மற்றும் பாடவாரியாக உரிய எண்ணிக்கையில் வினாத் தாள்களை நகலெடுத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக வழங்கிட வேண்டும்.
* மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) தங்களின் EMIS உள்நுழைவின் வழியாக மார்ச் 25 முதல் 30 வரை வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
* இவ்வாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட வினாத்தாள்களை மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப நகலெடுத்தல் வேண்டும்.
* நகலெடுக்கப்பட்ட வினாத்தாள்களை வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக ஒவ்வொரு பள்ளிக்கும் வகுப்புவாரியாக, பாடவாரியாக மற்றும் பயிற்றுவழி வாரியாகப் பிரித்து, தனித்தனி A3 foolscap size உறைகளுக்குள் வைத்து அவ்வுறையின் மீது பின்வரும் விவரங்களை எழுதி ஒட்டுதல் வேண்டும். அதாவது வகுப்பு, பாடத்தின் பெயர், பயிலும் வழி, தேர்வு நாள் போன்றறை இடம் பெற வேண்டும்.
* ஒரு பள்ளிக்குத் தேவைப்படும் உறைகளின் எண்ணிக்கை 19 ஆகும். (1ம் வகுப்புக்கு 3, 2ம் வகுப்புக்கு 3, 3ம் வகுப்புக்கு 3, 4ம் வகுப்புக்கு 5, 5ம் வகுப்புக்கு 5, மொத்தம் 19)
* அனைத்துப் பள்ளிகளுக்கும் 3ம் பருவம் தொகுத்தறி மதிப்பீடு நடைபெறுவதற்கு 2 நாள்களுக்கு முன்னதாகவே வினாத்தாள்கள் வழங்கப்பட வேண்டும்.
* அவ்வினாத்தாள்களை தலைமை ஆசிரியர்கள் பாதுகாப்பாக வைத்து தொகுத்தறி மதிப்பீடு கால அட்டவணையின்படி அன்று நடைபெறவிருக்கும் பாடத்திற்கு உரிய வினாத்தாளை மட்டும் பயன்படுத்தி அன்றைய மதிப்பீட்டினை நடத்திட அறிவுறுத்தப்பட வேண்டும்.
* வினாத்தாள்கள் அனைத்தும் மாநில மதிப்பீட்டுப் புலம் வழியாக https://exam.inschools, gov in என்னும் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்படும்.
* வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து மதிப்பீட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
* தேர்வு நடைபெறும் நாளுக்கு முந்தைய நாள் காலை 9 மணி முதல் தேர்வு நாள் மதியம் 1.00 மணி வரை அனைத்து நடுநிலைப் பள்ளிகளும் வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படும்.
* வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்யும் போது ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காண 14417 என்ற கட்டணமில்லாத் தொலைபேசிச் சேவையைப் பயன்படுத்த ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட வேண்டும்.
* தேர்வு தொடங்கும் நாளுக்கு முன்னதாகவே, துறையின் சார்பில் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அச்சுப்பொறியைப் பயன்படுத்தி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வினாத்தாள்களை ஆசிரியர்கள் அச்சிட்டு வைத்திருக்க வேண்டும்.
* அனைத்து நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களும் வழிகாட்டு நெறிமுறைகளை நன்கு அறிந்திருப்பதை மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.