இனி வீடு கட்ட 5.73 லட்சம் ரூபாய் நிதி
தமிழக அரசு சார்பாக ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் சொந்தமாக வீடு வேண்டும் என ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் கனவாக உள்ளது. அதன் படி வீடு இல்லாதவர்களுக்கு குடிசை மாற்றுவாரியத்தின் மூலம் வீடுகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழும் வீடு கட்ட நிதி வழங்கி வருகிறது. இதே போல பல்வேறு திட்டங்கள் நடைமுறையில் உள்ள நிலையில் பண்டைய பழங்குடியின மக்களுக்கான வீடு கட்டும் திட்டத்தின் நிதியை கூடுதலாக உயர்த்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பழங்குடியின மக்களுக்கு வீடு
இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பண்டைய பழங்குடியின மக்களுக்கான பிரதம மந்திரியின் பெருந்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் குடியிருக்கும் தோடா. இருளர். பனியன், காட்டுநாயக்கன். கோட்டா மற்றும் குரும்பா ஆகிய ஆறு பழங்குடியினர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டு வருகிறது. பண்டைய பழங்குடியின மக்களுக்கான பிரதம மந்திரியின் பெருந்திட்டத்தின் கீழ் 2023-24 ஆம் ஆண்டிற்கான இலக்காக 4811 வீடுகளை ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ளது.
11,947 வீடுகள் கட்ட அனுமதி
அதே போல், 2024-25 ஆம் ஆண்டுக்கான இலக்கு 7,136 வீடுகள் ஆகும். ஆக மொத்தம் பண்டைய பழங்குடியின மக்களுக்கான பிரதம மந்திரியின் பெருந்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கான மொத்த இலக்காக 11,947 வீடுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்த இலக்கில் தற்போது வரை 6,559 வீடுகளுக்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டு பணிகள் முன்னேற்றத்தில் இருந்து வருகிறது. மீதமுள்ள வீடுகளும் தகுதியுள்ள பயனாளிகளுக்கு விரைவில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
2 லட்சம் ரூபாய் போதவில்லை
இத்திட்டத்தில் ஒரு வீட்டிற்கான அலகுத்தொகை ரூ.2.00 இலட்சம் என ஒன்றிய அரசால் நிர்ணயிக்கப்பட்டு, அத்தொகை 60:40 என்ற விகிதத்தில் ஒன்றிய மற்றும் மாநில அரசால் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இதற்காக நாளதுவரை ரூ.22.466 கோடி பெறப்பட்டுள்ளது. இதில், ஒன்றிய அரசின் பங்குத்தொகை ரூ.13.48 கோடி மற்றும் மாநில அரசின் பங்குத் தொகை ரூ.8.98 கோடியாகும். இந்நிலையில், ஒன்றிய அரசால் நிர்ணயிக்கப்பட்ட அலகுத் தொகையான ரூ.2.00 இலட்சம் வீட்டின் கட்டுமானத்திற்கு போதுமானதாக இல்லையென கூறியுள்ளார்.
கூடுதல் நிதி ஒதுக்கிய தமிழக அரசு
இதனையடுத்து பழங்குடியின மக்களின் பொருளாதார நிலையைக் கருத்தில்கொண்டு வீட்டின் கட்டுமானத் தொகையினை சமவெளி பகுதியில் கட்டப்படும் ஒரு வீட்டிற்கு ரூ.5,07,000/-எனவும் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் கட்டப்படும் ஒரு வீட்டிற்கு ரூ.5,73,000/- எனவும் (ஒன்றிய அரசின் அலகுத்தொகை ரூ.2.00 லட்சம் உட்பட) உயர்த்தி ஆணை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தமிழ்நாடு அரசு தற்போது ரூ.108.71 கோடியை மாநில அரசின் கூடுதல் நிதியாக விடுவித்து ஆணை வழங்கியுள்ளது.
வீடு கட்ட 5.73 லட்சம் ஒதுக்கீடு
இத்தொகையிலிருந்து, வீட்டின் கட்டுமான நிலைக்கு ஏற்ப பயனாளிகளின் வங்கிகணக்கிற்கு நேரடியாக தொகை விடுவிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். இந்நிதி ஒதுக்கீடு "பண்டைய பழங்குடியின மக்களுக்கான பிரதம மந்திரியின் பெருந்திட்டத்தின்" கீழ் கட்டப்படும் வீடுகளை விரைந்து முடிக்க உதவிகரமாக இருக்கும். விரைவில் அனைத்து வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தமிழ்நாடு அரசால் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.