
சென்னை கடற்கரை பகுதியில் ஆயிரக்கணக்கான கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி வருகிறது. இந்த சம்பவம் இயற்கை ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதனையடுத்து ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் கடல் ஆமைகள் கடற்கரைப் பகுதிகளில் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலம் ஆகும். இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான ஆமைகளின் இறந்த உடல்கள் கரையொதுங்குவதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து நிலைமையை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
தமிழ் நாட்டில் சென்னை. செங்கல்பட்டு. கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் 5 (ஐந்து) நாட்டிகல் மைல்கள்(9.26 கி.மீ) தூரம் வரை மீன்பிடிக் கப்பல்கள், இழுவை மடிவலைகளைக்கொண்டு மீன்பிடித்தல் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது.
மீன்பிடி படகுகள் மீன்பிடிக்கும் போதும். கடலில் செயல்படும்போதும். ஜிபிஎஸ் டிரான்ஸ்பாண்டர்களை சில இடங்களில் அணைத்து வைக்கப்படுவதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு GPS டிரான்ஸ்பாண்டர்களை அணைத்து வைக்கக்கூடாது மீனவளத்துறையில் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உரிய வழிமுறைகளை கடைபிடிக்காத கப்பல் / படகுகளுக்கு அரசு வழங்கும் டீசல் மானியம் மற்றும் பிற படிகள் / நலத்திட்டங்கள் வழங்கப்பட மாட்டாது.
மேலும், கடல் ஆமைகள் முட்டையிட்டு இனபெருக்கம் செய்யும் காலங்களில் இந்திய கடலோர காவல்படை, மீன்வளத்துறை, வனத்துறை, கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்ட அமலாக்கப்பிரிவு மற்றும் தமிழ்நாடு கடலோர போன்ற துறைகள் ஒருங்கிணைந்து முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக்காப்பாளர் அவர்களது தலைமையில் சிறப்புக்குழு (Task Force) அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு வாரம் ஒரு முறை கூடி கடல் ஆமைகள் நடமாட்டம் / இனப்பெருக்கம் உள்ளிட்ட தகவல்களை பரிமாறிக் கொள்ளும்.
மேலும், இந்திய கடலோர காவல்படை, மீன்வளத்துறை, வனத்துறை, கடல்சார் அமலாக்கப்பிரிவு மற்றும் தமிழ்நாடு கடலோர காவல்படை போன்ற துறைகளின் அலுவலர்கள் அடங்கிய கூட்டு ரோந்துக் குழு கடல் பகுதிகளில் படகுகளின் / கப்பல்களின் நடமாட்டத்தில் விதிமீறல் ஏதும் உள்ளதா என்பதை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுத்து அரசுக்கு அறிக்கை அனுப்பிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறைகள் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆமை இறப்பு தொடர்பாக தொடர் ஆராய்ச்சி மேற்கொள்ளவும். அதைத் தடுக்க உரியதொடர் திறன்மேம்பாடு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆமைகள் இறந்து கரையொதுங்கும் இனங்களில் பிரேதப் பரிசோதனை உடனுக்குடன் மேற்கொள்ளவும். பிரேத பரிசோதனையின் எண்ணிக்கையை வனத் துறை அதிகப்படுத்தி (குறைந்த பட்சம் 50%) இறப்புக்கான காரணம் குறித்த அறிவியல் முடிவுகள் உடனுக்குடன் பெறப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
2023-2024-ஆம் ஆண்டில் வனத்துறை தன்னார்வலர்கள், அரசுசாரா அமைப்புகளுடன் இணைந்து 2,58,907 ஆமை முட்டைகளை சேகரித்து, அவற்றை பொறிப்பகங்கள் அமைத்து பாதுகாத்து 2.15,778 ஆமைக் குஞ்சுகளை கடலுக்குள் மீள அனுப்பியது. இந்த ஆண்டும் 52 பொறிப்பகங்கள் மூலம் தமிழ்நாட்டின் 14 கடலோர மாவட்டங்களில் கடல் ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
ஆமைகள் முட்டையிடும் பகுதிகளில் வனத்துறை மூலம் நடத்தப்படும் தினசரி இரவு ரோந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு ஆமைகள் நடமாட்டம் / இறப்பு பற்றி உடனுக்குடன் தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு முயற்சிகளுக்கு ஆதரவாக கடல் ஆமை பற்றி ஆர்வமுள்ள தன்னார்வலர்களை ஒருங்கிணைக்க வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடல் ஆமைகள் முட்டையிடும் காலத்தில் கடற்கரை முகப்பு விளக்குகள் இரவு 11.00 மணி முதல் காலை 5.00 மணி வரை கண்டிப்பாக எரியக்கூடாது என ஏற்கனவே உள்ள அரசாணையை தவறாமல் நடைமுறைப்படுத்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.