வரும் 27ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு..!

First Published Oct 19, 2023, 8:16 AM IST

மருது பாண்டியர்களின் குரு பூஜையை முன்னிட்டு வரும் 27ம் தேதி சிவகங்கை, திருப்புவனம் உள்ளிட்ட 7 ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து, வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தவர்கள் பெரிய மருது, சின்ன மருது என்று அழைக்கப்படும் மருது சகோதரர்கள். சிவகங்கை பகுதியை ஆண்ட வேலுநாச்சியார் அரசியின் படை தளபதியாக இருந்து,  அவர்களுக்கு பின்னர் சிவகங்கை மண்ணை ஆண்டனர். ஆங்கிலேயர்களை இந்த மண்ணை விட்டு விரட்ட வேண்டும் என்று போரிட்டதால் கடந்த 1801-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டார்கள். 

பின்னர் மூன்று தினங்கள் கழித்து 27-ம் தேதி இவர்கள் உடல், இவர்கள் கட்டிய காளையார் கோவிலுக்கு எதிர்புறம் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆண்டுதோறும் அக்டோபர் 27-ம் தேதி இவர்களுடைய நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:- விடுதலை போராட்ட வீரர்களான மருதுபாண்டியர்களின் குருபூஜை விழா வருகிற 27-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காளையார்கோவிலில் உள்ள அவர்களின் நினைவிடத்தில் நடைபெற உள்ளது.

எனவே, அன்றைய தினம் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையில் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவகோட்டை ஆகிய 7 ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவு பிறப்பித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் முழுவதும் கடந்த 23ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!