
Minister Senthil Balaji: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்குகள் மீதான விசாரணை சென்னை எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு
இந்த வழக்குகளின் அடிப்படையில் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறையால் 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி நள்ளிரவு கைது செய்யப்பட்டார். அடுத்தடுத்து நீதிமன்றங்கள் ஜாமீன் மறுத்ததை அடுத்து வேறு வழியில்லாமல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த வழக்கில் 471 நாட்களுக்கு பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. பின்னர் அடுத்த சில நாட்களிலேயே அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணையை வேண்டுமென்றே தாமதம் செய்யும் நோக்கில் தமிழக அரசும், போலீசாரும் ஈடுபட்டு வருவதாக வித்யா குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வேண்டும். குறிப்பாக செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். அதேபோல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறையும் தனியாக மனு தாக்கல் செய்தது.
பதவியா? ஜாமீனா?
இந்த மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அபயா எஸ் ஓகா மற்றும் ஏஜி மாசி தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்றது. இதில் முந்தைய விசாரணையின் போது செந்தில் பாலாஜி அமைச்சராகத் தொடர்கிறாரா இல்லையா என்பதை தெரிவிக்க உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி அபய் ஓகா அமர்வு நீங்கள் பதவி (அமைச்சர்) அல்லது ஜாமீன் இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் எதைத் தேர்வு செய்ய விரும்புகிறீர்கள்? என செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கியிடம் கேட்டார். மேலும், செந்தில்பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீன் தகுதியின் அடிப்படையில் அல்ல. பிரிவு 21ஐ மீறியதன் அடிப்படையில்தான் வழங்கப்பட்டது. விசாரணையில் ஏற்பட்ட தாமதம் மற்றும் நீண்ட சிறைவாசம் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே ஜாமீன் வழங்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.
வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற முடியாது
அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல்: செந்தில் பாலாஜியின் அதிகாரம், விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அச்சம் இருந்தால் விசாரணையை மாநிலத்திற்கு மாற்றலாம் என கூறினார். அதற்கு நீதிபதி அபயா எஸ் ஓகா ங்கள் நிலைப்பாட்டைத் தெரிவிக்க மூன்று முறை வாய்ப்புகள் வழங்கி இருந்தோம் ஆனால் அதை நீங்கள் பயன்படுத்தவில்லை இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றுவது என்பது இயலாத காரியம். ஏனென்றால் ஆயிரக்கணக்கான சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டி இருக்கிறது. அது பெரும் சிரமத்தையும் ஏற்படுத்தும் என்றார்.
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறார் செந்தில் பாலாஜி?
செந்தில்பாலாஜி தரப்பில் பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று கோரியபோது, நீதிபதிகள் அவகாசம் அளிக்க மறுத்துவிட்டனர். வரும் திங்கள் கிழமைக்குள் ஜாமீனா? அமைச்சர் பதவியா? என்பதை செந்தில்பாலாஜி தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். உச்ச நீதிமன்றம் அதிரடி காட்டியுள்ள நிலையில், விரைவில் தனது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்யக்கூடும் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.