கட்சியில் பணம் இல்லை.. திரள் நிதியை அள்ளிக் கொடுங்கள்.. உருக்கமாக பேசிய சீமான்!

Published : Mar 18, 2026, 09:11 PM IST

இந்தக் கேடுகெட்ட பணநாயகத்தை வீழ்த்தி மாண்புமிக்க ஜனநாயகத்தை மலரச் செய்ய வேண்டும் என்ற மகத்தான கனவோடு களத்திலே நிற்கிறோம் என்று சீமான் கூறியுள்ளார்.

PREV
13
உருக்கமாக பேசிய சீமான்

தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள திரள் நிதியை அள்ளிக் கொடுங்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வீடியோவில் பேசிய அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழ்கின்ற உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்!

வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடக்கவிருக்கின்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி எப்போதும் போல என் மக்களிடமிருந்து மக்களுக்காக வந்த ஒரு மகத்தான பேரியக்கம் மக்களை மட்டுமே நம்பி களத்திலே தனித்து நிற்கிறது. 

இங்கே பல ஆண்டுகள் அதிகாரத்தைச் செலுத்தி நிறைய பணத்தைச் சேமித்து பதுக்கி ஒதுக்கி வைத்திருக்கிற மற்ற அரசியல் கட்சிகள் மறுபடி அந்தப் பணத்தை முதலீடு செய்து அதிகாரத்தைத் தக்கவைக்க போராடும். ஒவ்வொரு தொகுதிக்கும் 30 கோடிகள் 40 கோடிகள் என்று முதலீடு செய்து அந்தத் தொகுதிகளை விலைக்கு வாங்க பார்க்கும்.

23
பணநாயகத்தை வீழ்த்தி ஜனநாயகத்தை மலரச் செய்ய...

இந்தச் சூழலில் இந்தக் கேடுகெட்ட பணநாயகத்தை வீழ்த்தி மாண்புமிக்க ஜனநாயகத்தை மலரச் செய்ய வேண்டும் என்ற மகத்தான கனவோடு களத்திலே நிற்கிறோம் உங்கள் பிள்ளைகள். வாக்குக்குக் காசு கொடுக்கிற இந்த காலத்தில் ஒரு தொகுதியை வெல்ல 30 கோடிகள் முதலீடு செய்கிற ஒரு முதலாளி தன் லாப தேவைக்கு முதலீடு செய்வாரா? அல்லது மக்கள் சேவைக்கு முதலீடு செய்வாரா என்கிற கேள்வி அங்கே எழுகிறது. வாக்குக்குக் காசு கொடுக்கிற அந்த இடத்தில் தான் ஊழல் லஞ்சத்திற்கான விதை ஊன்றப்படுகிறது என்பது உங்கள் பிள்ளைகள் எங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை; உண்மையும் கூட.

கனவோடு நிற்கிறோம்

அந்த இடத்திலே சேவை செத்து போகிறது. இப்போது இதை மாற்ற வேண்டும் என்று ஒரு பெருங்கனவோடு உங்கள் பிள்ளைகள் தொடர்ந்து களத்திலே நின்று போராடி வருகிறோம். 30 கோடிகள் முதலீடு செய்கிற வேட்பாளர்களுக்கு இடையில் போட்டியிடுகிற நாங்கள் அந்த வட்டி காசைக் கூட செலவு பண்ண முடியாத நிலையில் நின்று கொண்டிருக்கிறோம். ஆனால் மக்களுக்கு சேவை செய்ய பணம் தேவையில்லை தன்னலமற்று உண்மையும் நேர்மையுமாகப் பணியாற்ற வேண்டும் என்கிற மனம் இருந்தாலே போதும் என்பதை நிரூபிக்கத்தான் தொடர்ந்து உங்கள் பிள்ளைகள் இந்த களத்திலே நின்று வருகிறோம். இம்முறையும் அதே கனவோடு நிற்கிறோம்.

33
மக்கள் புரட்சியால் உறுதி செய்வோம்

பசி-பஞ்சம், ஊழல்-இலஞ்சம், கொலை-கொள்ளை, சாதிய இழிவு, தீண்டாமை, பாலியல் வன்கொடுமை, அடக்குமுறை, ஒடுக்குமுறை வளக்கொல்லை, மது-மதப் போதை இவை ஏதுமற்ற ஒரு புதியதொரு தேசம் செய்வோம்! மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்! என்ற முழக்கத்தோடு களத்திலே நிற்கிறோம். எப்போதும் போல எமது மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் தங்களால் இயன்ற நிதியைக் கொடுத்து எங்களை வலிமைப்படுத்தி இருக்கிறீர்கள்.

திரள் நிதியை அள்ளிக் கொடுங்கள்

இம்முறையும் மக்களிடமிருந்து மக்களுக்காக வந்த பிள்ளைகளுக்கு எங்கள் பெற்றோர், எங்கள் உடன் பிறந்தோர் இனமாகவும் பணமாகவும் வலிமையாகவும் வளமையாகவும் நீங்களே நின்றிருக்கிறீர்கள் இம்முறையும் நிற்பீர்கள் என்று உங்கள் பிள்ளைகள் அன்போடு கேட்கிறோம்.

 https://donate.naamtamilar.org/election_campaign_2026 திரள்நிதி திரட்சியின் வாயிலாக உங்களால் இயன்ற உதவியைச் செய்து உங்கள் பிள்ளைகளின் கைகளை வலிமைப்படுத்திவிடுங்கள். களத்திலே நின்று நம் இன முன்னோர்கள் கண்ட கனவை வென்று முடிப்போம் என்கிற உறுதியைத் தருகிறோம்'' என்று கூறியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories