தமிழகத்தில் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருந்து வந்த நிலையில், மாநில முதல்வரே துணைவேந்தர்களை நேரடியாக நியமிக்க அதிகாரம் வழங்கும் வகையிலான சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது
சென்னை உயர்நீதிமன்றம் தடை
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருப்பதே சரியானது. அதனை மாநில அரசுக்கு மாற்றியது பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு முரணானது எனக்கூறி தமிழக அரசின் சட்டத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
இந்த வழக்கை இன்று (பிப்ரவரி 4) விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழக அரசின் சட்டத்துக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அதிரடியாக ரத்து செய்தது. அப்போது நீதிபதிகள், ''இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கை விடுமுறை கால அமர்வு விசாரித்து அவசரம் அவசரமாக உத்தரவு பிறப்பித்தது ஏன்?'' என்றனர்.
6 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும்
தொடர்ந்து இந்த வழக்கை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும். இதற்கான அமர்வை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமைக்க வேண்டும். இந்த வழக்கின் விசாரணை முடியும் வரை துணைவேந்தர்கள் நியமனம் ஏதும் நடக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியது.
அதற்கு தமிழக அரசு சார்பில் வழக்கு முடிவடையும் வரை எந்த நியமனமும் மேற்கொள்ள மாட்டோம் என கூறியது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு தமிழக ஆளுரர் ஆர்.என்.ரவிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.