Published : Feb 13, 2026, 08:12 AM ISTUpdated : Feb 13, 2026, 09:23 AM IST
தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை முடக்கி வைக்கப்பட வாய்ப்பு இருப்பதால் அடுத்த 3 மாதங்களுக்கும் சேர்த்து இன்றைய தினம் தகுதி உள்ள அனைத்து மகளிருக்கும் ரூ.5000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 1.31 கோடி மகளிருக்கு மாதந்தோறும் தலா ரூ.1000 மகளிர் உரிமைத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோப் பதிவில், “"தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் மகளிர் உரிமைத் தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும், யார் முட்டுக்கட்டை போட்டாலும், எத்தகைய அவதூறுகளைப் பரப்பினாலும், அதிலிருந்து இந்த ஸ்டாலின் ஒருபோதும் பின்வாங்க மாட்டான்.
24
வரவு வைக்கப்பட்ட ரூ.5000
நிதி நெருக்கடி ஒரு பக்கம் இருந்தாலும், பெண்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதுதான் ஒரு நல்ல அரசுக்கு அழகு. இது வெறும் ஓட்டுக்காகச் சொல்லப்பட்ட திட்டமல்ல; பெண்களின் உழைப்பிற்கு இந்த அரசு தருகிற அங்கீகாரம்.
34
மகளிர் உரிமைத் தொகையின் முக்கியத்துவம்..
ஏழை, எளிய நடுத்தரக் குடும்பத்துப் பெண்களுக்கு இந்த ஆயிரம் ரூபாய் என்பது எவ்வளவு பெரிய நிம்மதி என்பது எனக்குத் தெரியும். அந்தத் தாய்மார்களின் முகத்தில் நான் பார்க்கிற மகிழ்ச்சிதான், இந்த அரசுக்குக் கிடைக்கிற மிகப்பெரிய நற்சான்றிதழ். எத்தனையோ பேர் தடுத்தார்கள், எத்தனையோ பேர் விமர்சித்தார்கள்; அத்தனையையும் மீறித் தகுதியுள்ள அத்தனை மகளிருக்கும் இந்தத் திட்டம் போய்ச் சேரும். இதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
மேலும் தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் வாயிலாகவோ, நீதிமன்றம் வாயிலாகவோ மகளிர் உரிமைத் தொகையை நிறுத்தி வைக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான தலா ரூ.1000 மற்றும் கோடை காலத்திற்காக சிறப்பு நிதியாக ரூ.2000 சேர்த்து இன்றே மகளிரின் வங்கி கணக்குகளில் ரூ.5000ஆக வரவு வைக்கப்படுகிறது. மேலும் திராவிடமாடல் 2.0 ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகையானது ரூ.1000ல் இருந்து ரூ.2000ஆக உயர்த்தி வழங்கப்படும்" என்று அறிவித்துள்ளார்.