சமீபத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட முதல்வர் மு.க. ஸ்டாலினை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று சந்தித்து உடல்நலம் விசாரித்தார். இந்த சந்திப்பு அரசியல் நோக்கம் கொண்டது அல்ல, நட்புக்காக மட்டுமே என்று பிரேமலதா விளக்கமளித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 21-ம் தேதி காலை நடைபயிற்சியின்போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து அவருக்கு 'ஆஞ்சியோ' சிகிச்சையும் அளிக்கப்பட்டது. ஒரு வார சிகிச்சைக்கு பிறகு கடந்த 27-ம் தேதி முதல்வர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இந்நிலையில் இன்று தலைமைச் செயலகத்திற்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த முதல்வர் வழக்கமானப் பணிகளைத் தொடர்ந்தார்.
24
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா
இந்நிலையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா திடீரென சந்தித்தார். அப்போது அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். அவருடன் பொருளாளர் சுதீஷ் மற்றும் பார்த்தசாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பிரேமலதா சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. அதிமுக மாநிலங்களை எம்.பி. பதவி கொடுக்காததால் அதிருப்தியில் இருந்து வரும் நிலையில் பிரேமலதா திமுக கூட்டணிக்கு செல்வதற்கான அச்சாரம் தான் இந்த சந்திப்பா என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
34
100 சதவீதம் அரசியல் காரணங்கள் இல்லை
இந்நிலையில் சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா: முதல்வரை சந்தித்ததில் 100 சதவீதம் அரசியல் காரணங்கள் இல்லை. நட்புரீதியாக முதல்வரின் உடல்நிலை குறித்து கேட்டறிய மட்டுமே சந்தித்தோம். கலைஞருக்கும், கேப்டனுக்கும் இடையில் 45 ஆண்டுகால நட்பு இருந்தது. அப்போதே மு.க.ஸ்டாலின் உடன் கேப்டன் நட்புடன் இருந்துள்ளார். அதே நட்பு ரீதியிலான, குடும்ப ரீதியிலான சந்திப்பு தான்.
ஆகஸ்ட் மூன்றாம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் தொடங்க இருக்கிறோம். கும்மிடிப்பூண்டி ஆரம்பித்து கன்னியாகுமரி வரை முதல் கட்ட பயணம் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட பயணம் செல்ல உள்ளோம். அதேபோல் கடலூரில் மாநாடு ஜனவரி 9ல் வைத்துள்ளோம். எங்களுடைய பணி தேமுதிகவை பலப்படுத்துவது தான். யாருடன் கூட்டணி என்று தற்போது கூற முடியாது. கூட்டணி பற்றி நேரம் வரும்போது அறிவிப்பேன் என தெரிவித்துள்ளார்.