
முன்னாள் முதலா்வர் மு.கருணாநியின் சகோதரி சண்முக சுந்தரம்மாளின் மகன்கள் முன்னாள் மத்திய அமைச்சர் மாறன் மற்றும் முரசொலி செல்வம். முரசொலி செல்வம் முதல்வர் ஸ்டாலினின் சகோதரியான செல்வியை திருமணம் செய்து கொண்டார். இவர் செல்வியுடன் பெங்களூருவில் வசித்து வந்தார். முரசொலி செல்வம் - செல்வி தம்பதியருக்கு ஜோதிமணி என்ற மகள் உள்ளார்.
முரசொலி செல்வம் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார். இந்நிலையில் வழக்கம் போல் தனது பணிகளை மேற்கொண்டிருந்த முரசொலி செல்வத்திற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர் முரசொலி செல்வத்தின் உடல் நேற்று பிற்பகல் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, எம்.பி.தொல்.திருமாவளவன், பாஜக பிரமுகர் சரத்குமார், ராதிகா சரத்குமார், நடிகர் பிரஷாந்த், சங்கீதா விஜய், பல்வேறு அமைச்சர்கள், எம்.பி.கள், எம்.எல்.ஏ.கள் உள்பட அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் அன்பு மருமகனும், அவரது மனசாட்சியான முரசொலி மாறனின் இளவலும், தங்கை செல்வியின் கணவருமான என் அன்புக்குரிய முரசொலி செல்வம் மறைந்தார் என்ற செய்தி இடி போல என் நெஞ்சத்தைத் தாக்கி, வேதனைக் குருதியை வடியச் செய்கிறது.
தலைவர் கலைஞரின் மூத்த பிள்ளையான முரசொலியின் பணிகளைத் தன் தோளில் சுமந்துகொண்டு இளமைப் பருவம் முதலே திறம்படச் செயலாற்றியவர் அண்ணன் முரசொலி செல்வம். தலைவர் கலைஞரும் அவரது மனசாட்சியான முரசொலி மாறனும் மனதில் நினைப்பதை எழுத்தில் - செயலில் நிறைவேற்றியவர் பாசத்திற்குரிய முரசொலி செல்வம்.
கழகத்தின் போர்வாளான முரசொலி நாளேட்டின் ஆசிரியராகப் பொறுப்பேற்று தன் எழுத்துகளால் ஜனநாயகக் குரலாக ஒலித்தவர். அடக்குமுறைக்கு அஞ்சாமல் சட்டமன்றத்தில் கூண்டிலேறி கருத்துரைத்தவர். "முரசொலி சில நினைவுகள்" என்ற அவரது புத்தகத் தொகுப்பு முரசொலி எதிர்கொண்ட நெருக்கடிகளையும் முரசொலியோடு செல்வத்துக்கு இருக்கும் பின்னிப் பிணைந்த உறவையும் எடுத்துரைப்பது ஆகும். தேர்தல் களம் முதல் திரைப்படப் பணிகள் வரை அனைத்துத் துறைகளிலும் முத்திரையைப் பதித்தவர். எந்த நிலையிலும் கழகமே மூச்சு என வாழ்ந்த கொள்கைச் செல்வம் அவர்.
அதிர்ந்து பேசாதவர். ஆனால், ஆழமான கொள்கைவாதி. சிலந்தி என்ற பெயரில் முரசொலியில் அவர் எழுதிய நையாண்டியும் நகைச்சுவையும் ததும்பும் கட்டுரைகள் கழகத்தின் இளைய தலைமுறையினருக்குக் கொள்கை இரத்தம் பாய்ச்சும் வலிமை கொண்டவை. நேற்று முன்தினம்கூட முரசொலியில் கட்டுரை எழுதிய அவர், இன்று காலையில் அடுத்த கட்டுரைக்கான குறிப்புகளை எடுத்துவைத்துவிட்டு, சற்று கண்ணயர்ந்த நேரத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார் என்பதைக் கேட்டதும் இதயம் அதிர்ந்து, நொறுங்கிவிட்டேன்.
சிறுவயது முதலே எனக்கு அண்ணனாக - வழிகாட்டியாக, இயக்கப் பணிகளில் ஆலோசனைகள் வழங்கி, நெருக்கடி நேரங்களில் தெளிவான தீர்வுகளை முன்வைத்து, கழகத்துடனான என் வளர்ச்சியில் தோளோடு தோள் நின்றவர் என் பேரன்பிற்குரிய அண்ணன் முரசொலி செல்வம். தலைவர் கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்த பிறகு, நான் சாய்வதற்குக் கிடைத்த கடைசித் தோளை, கொள்கைத் தூணை இழந்து நிற்கிறேன். என்னை நானே ஆற்றுப்படுத்த முடியாத நிலையில், கழகத்திலும் குடும்பத்திலும் யாருக்கு எப்படி ஆறுதல் சொல்லப் போகிறேன்! செல்வமே.. முரசொலி செல்வமே.. பண்பின் திருவுருவமே... திராவிட இயக்கத்தின் படைக்கலனே... கழகத்தின் கொள்கைச் செல்வமே.. நெஞ்சிலும் நினைவிலும் என்றும் நிலைத்திருப்பீர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே உயிரிழந்த முரசொலி செல்வத்தின் உடல் இன்று மாலை 4 மணிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பெசன்ட்நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.