ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் அதிர்ச்சியில் உள்ளார். தற்போது, விஜய் அணியில் இணைய ஓபிஎஸ் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. அந்த வகையில் கூட்டணி தொடர்பாக ஒரு பக்கம் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ள நிலையில், நானும் கூட்டணியில் இருக்கேன், கூட்டணியில் இருக்கேன் என கூறி வரும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை தான் பாஜகவினர் யாரும் கண்டுகொள்வதாக தெரியவில்லை. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம்,
ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது பொறுப்பு முதலமைச்சராக செயல்பட்டவர் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு எல்லாம் தலைகீழாக மாறியது. ஓ.பன்னீர் செல்வத்தை முதலமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கிய சசிகலா தான் முதலமைச்சராக திட்டமிட்டார். இதற்காக நகர்த்தப்பட்ட காய்களில் தான் யாரும் எதிர்பாராத அதிகார மோதல் ஏற்பட்டது. ஜெயலலிதா நினைவிடத்தில் தர்மயுத்தம் தொடங்கினார் ஓபிஎஸ்.
24
ஓபிஎஸ்யை கழட்டி விட்ட எடப்பாடி
அடுத்தாக முதலமைச்சர் பொறுப்பை சசிகலா ஏற்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் உச்சநீதிமன்றத்தில் சொத்து குவிப்பு தீர்ப்பால் சிறைக்கு செல்ல நேரிட்டதை தொடர்ந்து முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார்.
இதனையடுத்து ஓபிஎஸ்- இபிஎஸ் இடையே சமாதானம் ஏற்பட்டு அதிமுகவில் இரட்டை தலைமையாக செயல்பட்டனர். 2021ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு கட்சியை கைப்பற்ற திட்டமிட்ட எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வத்திற்கு கட்சியில் வழங்கப்பட்ட அதிகாரத்தை பறித்தார். இதனால் மீண்டும் ஓ.பன்னீர் செல்வம் சட்ட போராட்டத்தை தொடங்கினார்.
34
ஓபிஎஸ்யை கண்டு கொள்ளாத பாஜக
சுமார் 4 வருடங்கள் இபிஎஸ்- ஓபிஎஸ் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அதிமுக- பாஜக கூட்டணி உடைந்த நிலையில் பாஜக அணியில் இடம்பிடித்தார் ஓபிஎஸ், அவருக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டது. தனி சின்னத்தில் போட்டியிட்டவர் அதிமுகவை விட அதிக வாக்குகளை பெற்று அசத்தினார்.
இந்த நிலையில் 2026ஆம் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக அதிமுகவில் இணைய பல கட்ட முயற்சி மேற்கொண்டார். எந்த வித நிபந்தனையும் இல்லாமல் அதிமுகவில் இணைய தயார் என ஓபிஎஸ் அறிவித்தார். ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத எடப்பாடி பழனிசாமி, காலம் கடந்த செயல் எனக்கூறி ஓ.பன்னீர் செல்வத்தை தட்டி கழித்தார்.
பாஜகவாவது தன்னை அதிமுகவில் சேர்த்து வைக்கும் என எதிர்பார்த்தவருக்கு பாஜகாவும் தற்போது கை விரித்து விட்டது. அந்த வகையில் தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதிய நிலையில், ஓ.பன்னீர் செல்வத்திற்கு மோடி அனுமதி கொடுக்கவில்லை. அதே நேரம் எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இருந்த கடைசி வாய்ப்பும் கை நழுவி போனதால் அதிர்ச்சியில் உள்ளார் ஓ.பன்னீர் செல்வம். அதே நேரம் ஓ.பன்னீர் செல்வத்திற்கு அரசியல் ஆலோசகராக இருக்கும் பன்ருட்டி ராமசந்திரன் கூறுகையில்,
ஓ.பன்னீர் செல்வத்தை மதிக்காத பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். தவெகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை ஓ.பன்னீர் செல்வம் சந்தித்தால் தென் மாவட்டங்களில் கூடுதல் பலம் விஜய்க்கு கிடைக்கும் என ஆலோசனை தெரிவித்து வருகிறார். இதனையடுத்து பாஜக கூட்டணிக்கு எண்டு கார்டு போட்டுவிட்டு விஜய் அணியில் இணைய ஓபிஎஸ் தலைமையிலான ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.