மேலும், தலைமுறை தலைமுறையாக அந்த பகுதியில் வசித்து வரும் மண்ணின் மைந்தர்களிடம் இருந்து நிலங்களை பெற்றுக்கொண்ட என்எல்சி நிறுவனம், அவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பை வழங்காமல் நுழைவுத் தேர்வு நடத்தி வெளிமாநிலத்தவர்களை பணியில் சேர்ப்பதாக சௌமியா அன்புமணி தெரிவித்தார். “மருத்துவப் படிப்புக்கு ஆள் எடுப்பது போல ஏன் நுழைவுத் தேர்வு நடத்துகிறீர்கள்?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
என்எல்சி நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியான சிஎஸ்ஆர் நிதி முழுமையாக மக்களுக்கு பயன்படும் வகையில் செலவிடப்படுவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். சாலை, மேம்பாலம் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டதாக கூறினாலும், அவை பெரும்பாலும் நிறுவன வளாகத்திற்குள்ளேயே இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.