10-ம் வகுப்பு தேர்வு! தாய்க்கு பதில் தேர்வு எழுதிய 28 வயது மகள்! சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்!
நாகப்பட்டினத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆள்மாறாட்டம் அம்பலமானது. தாய் சுகந்திக்காக மகள் செல்வாம்பிகை தேர்வு எழுதியது விசாரணையில் தெரியவந்தது.
நாகப்பட்டினத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆள்மாறாட்டம் அம்பலமானது. தாய் சுகந்திக்காக மகள் செல்வாம்பிகை தேர்வு எழுதியது விசாரணையில் தெரியவந்தது.
நடராஜன் தமயந்தி பள்ளி
தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 28ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு நடந்து வருகிறது. இந்த தேர்வில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தவிர தனித்தேர்வர்களும் தேர்வு எழுதி வருகின்றனர். இதன்படி நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் உள்ள நடராஜன் தமயந்தி பள்ளியில் நேற்று காலை ஆங்கில பாடத்திற்கான தனித்தேர்வு தொடங்கியது. தேர்வு தொடங்கியவுடன் தேர்வு அறை கண்காணிப்பாளர் வினா மற்றும் விடைத்தாள்களை தேர்வு எழுதும் நபர்களிடம் கொடுத்து விட்டு கையப்பம் பெற்றார்.
10ம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டம்
அப்போது அங்கு தேர்வு எழுதிய ஒரு மாணவி முக கவசம் அணிந்து இருந்தார். சந்தேகமடைந்த தேர்வு அறை கண்காணிப்பாளர் முககவசத்தை அகற்றும்படி கூறினார். நுழைவு சீட்டில் தேர்வு எழுதும் மாணவியின் புகைப்படம் ஒட்டப்பட்டு இருந்தது. ஆனால் தேர்வு அறை கண்காணிப்பாளர் வைத்திருந்த வருகை பதிவு குறிப்பேட்டில் வேறு ஒரு நபர் புகைப்படம் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த தேர்வு அறை கண்காணிப்பாளர் அந்த மாணவியை தேர்வு கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து சென்றார்.
இதையும் படிங்க: இரண்டு நாட்கள் விடுமுறை! குஷியில் துள்ளி குதிக்கும் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை
இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர், தேர்வு கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பறக்கும் படை அலுவலர்கள், தேர்வு மையத்தில் பாதுகாப்பிற்கு இருந்த வெளிப்பாளையம் போலீசார் வருகை தந்தனர். தொடர்ந்து அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினர். இதில் நாகப்பட்டினம் வெளிப்பாளையம் ஏழைப்பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த செல்வாம்பிகை (28) என்பது தெரியவந்தது. இவர் தனது தாய் சுகந்தி என்பவருக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத வந்தது தெரியவந்தது. கடந்த 28ம் தேதி நடந்த தமிழ் பாடதேர்வை இதேபோல் முககவசம் அணிந்து செல்வாம்பிகை தேர்வு எழுதியது தெரியவந்தது.
இதையும் படிங்க: ஆஹா! விடுமுறை தொடர்பான அறிவிப்பு வந்தாச்சு! பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் குஷி!
வெளிப்பாளையம் போலீசார் விசாரணை
இது குறித்து வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து செல்வாம்பிகையை வெளிப்பாளையம் காவல் நிலையம் அழைத்து சென்றனர். தாய் சுகந்தி பத்தாம் வகுப்பு தனித்தேர்விற்காக விண்ணப்பம் செய்துள்ள போது மகள் எதற்காக தேர்வு எழுத வந்தார் என விசாரணை செய்து வருகின்றனர். நாகப்பட்டினத்தில் நடந்த ஆள்மாறட்டம் குறித்த தகவல் கலெக்டர் அலுவலகம் வாயிலாக சென்னைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு பின்னர் ஆள்மாறட்டம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.