
மாணவர்களுக்கான கல்வி அறிவு
கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் மாணவர்களுக்கு வாழும் சூழலை புரிந்து கொள்ளும் வகையில் பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே மாணவர்களுக்கு பள்ளிகளில்சிறார் திரைப்படங்கள் திரையிடுவது தொடர்பாக அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6.9 வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்கள் காணும் வகையில், ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது வாரத்தில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
சிறார் திரைப்படங்கள்
மாணவர்கள் தாங்கள் வாழும் சூழலை புரிந்து கொள்ளுதல், பல்வேறு கலாச்சாரங்களின் தனித்தன்மையை அறிந்து கொள்ளுதல், தன்னம்பிக்கை, நட்பு பாராட்டுதல், குழுவாக இணைந்து செயல்படுதல், பாலின சமத்துவம் உணர்தல் ஆகிய பண்புநலன்களை அடையாளம் காணுதல், தங்களிடம் உள்ளார்ந்து புதைந்திருக்கும் படைப்பாற்றலை வெளிக்கொணர செய்தல் ஆகியன இச்சிறார் திரைப்படம் திரையிடுதலின் முக்கியமான நோக்கமாக அமைகிறது.
திரைப்பட மன்றம் நோக்கங்கள்
திரைப்பட விமர்சனங்கள், திரைக்கதை எழுதுதல், நடிப்பு அல்லது திரைப்படத் தயாரிப்பு மூலம் மாணவர்கள் தங்கள் எண்ணங்கள். யோசனைகள் மற்றும் ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்த ஒரு தளத்தை வழங்குதல். முன்னோக்குகளை கேமராக்கள், எடிட்டிங் மென்பொருள், லைட்டிங் மற்றும் ஒலி போன்ற திரைப்படத் தயாரிப்பு தொடர்பான தொழில்நுட்ப திறன்களை வளர்ப்பதற்கான வாய்ப்பை மாணவர்களுக்கு வழங்குதல் மற்றும் இது சார்ந்த தொழில் ஆர்வத்தை ஊக்குவித்தல்.
சினிமா துறையில் கதை எழுதுதல், திரைக்கதை, இயக்கம், எடிட்டிங், இசை போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபடும் நபர்களுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துதல். திரைப்படக் கலையில் ஆர்வமுள்ள மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கான போட்டிகளில் பங்கேற்க செய்தல்.
திரைப்பட விவரம்
ஒவ்வொரு மாதமும், இரண்டாவது வாராத்தில் சிறார் திரைப்படம் திரையிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் திரையிடப்படவுள்ள திரைப்படம் முன்கூட்டியே மாதத்தின் முதல் வாராத்தில் EMIS வழியே தலைமையாசிரியருக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்த ஆண்டின் முதல் சிறார் திரைப்படமானது கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டிகளில், மாணவர்கள் தயாரித்த "டாப் 10-என்ற தலைப்பில், குழந்தைகள் தினத்தையொட்டி நவம்பர் -2024 ஆம் மாதத்தில் திரையிடத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளின் மனநலத்தினை செறிவூட்டுவதற்காக 14416 சிறப்பு எண் வசதியினை ஆசிரியர்கள் மற்றம் கழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக விழிப்புணர்வு குறும்படமும் திரையிடப்பட உள்ளது.
வழிகாட்டும் நெறிமுறைகள்:
அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைபள்ளிகளில் 6 முதல் 9 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, குறிப்பிட்ட சிறார் திரைப்படங்கள் திரையிடலுக்கென ஒதுக்கப்பட்டுள்ள பாடவேளையில் இத்திரைப்படத்தினை திரையிடுதல் வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் சிறார் திரைப்படம் திரையிடுதல் தொடர்பான நிகழ்வுகளை ஒருங்கிணைக்க ஒரு பொறுப்பாசிரியரை நியமிக்க வேண்டும்.
பள்ளி சூழலுக்கேற்ப, மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பின் முன்கூட்டியே திட்டமிட்டு மாணவர்களை குழுக்களாக பிரித்து கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளுக்கு எவ்வித இடையூறுமின்றி திரையிடல் நிகழ்வினை மேற்கொள்ள வேண்டும்.
மாணவர்களுக்கான திரைப்படம்
அனைத்து மாணவர்களும் திரைப்படத்தை காண்பதற்கு நல்ல காற்றோட்டத்துடன் போதுமான இடவசதி உள்ள அறையை தெரிவு செய்ய வேண்டும். திரையிடுதலுக்கு முன், திரைப்படக்காட்டி மற்றும் ஒலிப்பெருக்கி சாதனங்கள் சரியாக இயங்குவதை உறுதி செய்திட வேண்டும். குழந்தைகள் சிறந்த திரைப்பட அனுபவத்தை பெற ஏதுவாக, வெளிப்புற ஒளி குறைவாக இருப்பதையும் போதுமான காற்றுவசதி உள்ளதையும் உறுதி செய்திடல் வேண்டும்.
மின்சாதனங்கள் அதிக வெப்பமடையாதிருக்க நடவடிக்கை மேற்கொள்வதுடன் மின் இணைப்புகள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும். மின்சாதனங்களை மாணவர்கள் எளிதில் அணுக இயலாத வகையில் உரிய முன்னேற்பாட்டு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
திரைப்படம்- வழிகாட்டு முறைகள்
EMIS வாயிலாக வழங்கப்படும் இத்திரைபடம் மாணவர்களுக்கென பிரத்யேகமாக தொகுக்கப்பட்டுள்ளது. எனவே. EMIS தளத்திலிருந்து மட்டுமே திரைப்படத்தினை திரையிடுதல்/பதிவிறக்கம் செய்தல் வேண்டும். பிற வலைதளங்களிலிருந்து இத்திரைப்படம் திரையிடுதல்/பதிவிறக்கம் செய்தல் கூடாது. முன்கூட்டியே பதிவிறக்கம் செய்து, Pen drive அல்லது DVDல் சேமித்து வைத்து Hi-tech lab/TV/Projector/Smart Board (Speaker) மாணவர்களுக்கு திரையிட வேண்டும்.
திரைப்படம் திரையிடப்படுவதற்கு முந்தைய வாரத்தில், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் EMIS செயலியில் உள்ள திரைப்படத்தின் சுவரொட்டியினை (Poster) (A4 அளவு தாளிற்கு குறைவில்லாமல்) பள்ளி வளாகத்தில் மாணவர்கள் அறிந்திடும்வகையில், அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும். திரையிடப்படவுள்ள திரைப்படத்தின் கதைச் சுருக்கம் முன்கூட்டியே வழங்கப்படும். திரைப்படம் திரையிடும் நாளுக்கு முன்னரே தலைமையாசிரியர்/பொறுப்பாசிரியர் திரைப்படத்தைப் பார்க்க வேண்டும்.
திரைப்படம்- விவாதம்
திரைப்படம் திரையிடப்பட்டு முடிந்த பிறகு, படத்தின் மையக்கருத்து/திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம் குறித்து உரையாடல் நிகழ்த்த ஏதுவாக கலையில் ஆர்வமுள்ள துறைசார் வல்லுநரை சிறப்பு அழைப்பாளராக அழைக்கலாம். திரையிடல் நிகழ்வினை ஆவணப்படுத்தும்போது மாணவர்களின் கவனத்தை சிதறடிக்காத வண்ணம் செயல்பட வேண்டும். திரைப்படம் மற்றும் அதன் கதைக்களம், மையக் கதாபாத்திரங்கள், துணை நடிகர்களின் கதாபாத்திரங்கள், ஒளிப்பதிவு, கதைநிகழ்வுகள், கதைப்போக்கு, முடிவின்தன்மை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களின் கவனத்தை அறிந்துணரும் வினாக்களை கேட்கலாம்.