வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியது மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு மரண பயத்தை காட்டியது. அதாவது ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்துவிட்டதாக தகவல் வெளியான நிலையில் வடகிழக்கு பருவமழை நிறைவு பெறவில்லை. பொங்கல் வரை தமிழகத்தில் மழை இருக்கும். அதன் பிறகு தான் வட கிழக்கு பருவமழை விலகும் என வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். இந்நிலையில் வரும் நாட்களில் தமிழகத்தில் மழை இருக்கா? இல்லையா? என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
25
Tamilnadu rain
இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். நீலகிரி மற்றும் கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
அதேபோல், நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
45
Weather Forecast
4ம் தேதி முதல் 8ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.