திண்டுக்கல் மாவட்டத்தில் சாதி மாறி காதல் திருமணம் செய்ததால் ஏற்பட்ட தகராறில், மருமகன் ராமச்சந்திரனை மாமனார் சந்திரன் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தார். பால் கறக்க சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்துள்ள கூட்டத்து அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (24). பால் கறக்கும் தொழிலாளி. வழக்கம் போல கணபதிபட்டி கிராமத்தில் பால் கறவைக்கு சென்ற இடத்தில் சந்திரன் என்பவரின் மகள் ஆர்த்தி (21) என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் கரூரில் தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு வந்துள்ளார்.
24
காதல் திருமணம்
இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. இவர்கள் காதல் விவகாரம் பெண்ணின் வீட்டாருக்கு தெரியவந்ததை அடுத்து கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். குறிப்பாக இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஏற்கவில்லை. இந்நிலையில் எதிர்ப்புகளை மீறி கடந்த ஜூன் மாதம் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
34
தகராறில் ஈடுபட்ட மாமனார்
இதனால் ராமச்சந்திரன் மீது சந்திரன் குடும்பத்தினர் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் வழக்கம் போல் குளிப்பட்டி கிராமத்திற்கு பால் கறந்து விட்டு ராமச்சந்திரன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது ஊரின் பாசன கால்வாய் அருகே வந்த ராமச்சந்திரனை சந்திரன் வழிமறித்து மீண்டும் தகராறில் ஈடுபட்டார்.
அப்போது சந்திரன் தான் மறைத்து வைத்திருந் அரிவாளால் கண்ணிமைக்கும் நேரத்தில் ராமச்சந்திரனை சரமாரியாக வெட்டியுள்ளார். படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராமசந்திரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராமச்சந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து மருமகனை படுகொலை செய்த மாமனார் சந்திரனை போலீசார் கைது செய்தனர். மருமகனை மாமினாரே வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.