ECR Car Accident Shocking Information: சென்னை அருகே கோவளத்தில் நேற்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தொடர்பாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அடுத்துள்ள கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் அருகே செம்மஞ்சேரி குப்பம் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று அதிகாலை ஈச்சர் லாரி ஒன்று பழுதாகி சாலையோரத்தில் நின்றுக்கொண்டிருந்தது. அப்போது அதிகவேகத்தில் வந்த சொகுசு கார் லாரி நிற்பது கூட தெரியாமல் கண்ணிமைக்கும் நேரத்தில் லாரியின் பின் பக்கத்தில் பயங்கர மோதி கார் பாய்ந்து சொருகி நின்றது. இந்த விபத்தில் காரின் மேல்பாகம் அப்பளம் போல் நொறுங்கியது.
24
Kovalam Car Accident
இந்த விபத்தில் மலேசியாவில் இருந்து சென்னை திரும்பிய முகமது ஆஷிக்(22) மற்றும் ஆதில் முகமது(19), அஸ்ரப் முகமது(22), சுல்தான்(23) ஆகியோர் தலை சிதைந்து கொடூரமான முறையில் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து அப்பகுதியினர் போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி லாரியின் அடியில் சிக்கிய காரை ஒருவழியாக மீட்டனர். இதனையடுத்து 4 பேரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சென்னை பார்டர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சுல்தான். இவரது மகன் தான் முகமது ஆஷிக். நேற்று அதிகாலை 1.30 மணியளவில் தான் மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார். அவரை வரவேற்று அழைத்துச் செல்ல திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த அவரது நண்பர்களான அஸ்ரப் முகமது, ஆதில் முகமது, சுல்தான் மூவரும் சென்னை விமான நிலையம் வந்திருந்தனர். முகம்மது ஆஷிக் வெளியே வந்ததும் அவரது உடைமைகளை காரில் ஏற்றிக் கொண்டு நேராக வீட்டிற்குச் செல்லாமல் வண்டலூர் வழியாக ஈசிஆர் வழியாக மாமல்லபுரம் சென்றனர்.
அங்கு சிறிது நேரம் தங்கிவிட்டு அதிகாலை 4 மணியளவில் 4 பேரும் சென்னையை நோக்கி வந்துக்கொண்டிருந்தனர். அதிவேகத்தில் வந்துக் கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் கோவளம் அருகே சாலைத்தடுப்பில் மோதி, பின்னர் அங்கு பழுதாகி நின்றிருந்த லாரியின் பின்னால் பாய்ந்தது. இந்த விபத்தில் 4 இளைஞர்களும் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மலேசியாவில் இருந்து வந்து வீட்டுக்கு கூட செல்லாமல் மகன் விபத்தில் உயிரிழந்ததை பார்த்து தாய் கதறி அழுதார். விபத்தில் உயிரிழந்த முகமது ஆஷிக்கின் தந்தை மலேசியாவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.