சட்டப்பேரவை தேர்தலில் திமுக 164 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு எவ்வளவு சீட்டுகள் கிடைக்கும்? என்பது குறித்த உத்தேச பட்டியலை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஆளுங்கட்சியான திமுக, ஆண்ட கட்சியான அதிமுக, தமிழகத்தில் காலூன்ற துடிக்கும் பாஜக, பெரும் நம்பிக்கையுடன் களமிறங்கும் விஜய்யின் தவெக தேர்தல் பணிகளில் சுறுசுறுப்புடன் இயங்கி வருகின்றன. திமுக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற இலக்கு வைத்துள்ள நிலையில், அந்த கூட்டணியில் தேமுதிகவும் இன்று ஐக்கியமாகியுள்ளது.
25
திமுக கூட்டணி உத்தேச பட்டியல்
பாஜக, அதிமுக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக செல்லும் என எதிர்பார்த்த நிலையில், திமுக பக்கம் சாய்ந்துள்ளது தேமுதிக. இந்த நிலையில், திமுக கூட்டணியில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. அதாவது திமுக மட்டும் தனியாக 164 தொகுதிகளில் போட்டியிடும் என தகவல் வெளியாகி உள்ளது. மீதமுள்ள 70 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கும் என தகவல்கள் கூறுகின்றன.
35
காங்கிரஸ், தேமுதிகவுக்கு எவ்வளவு?
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தொ.திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 10 முதல் 12 சீட்டுகள் வரை ஒதுக்கப்படலாம். திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிகவுக்கு 7 அல்லது 8 சீட்டுகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்கப்பட உள்ளது. வைகோவின் மதிமுகவுக்கு 5 சீட்டுகள் கொடுக்கப்படலாம். இடது சாரி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா 5 சீட்டுகள் ஒதுக்கப்படலாம்.
மனிதநேய மக்கள் கட்சிக்கு 4 சீட்டுகளும், முஸ்லீம் லீக் கட்சிக்கு 4 சீட்டுகளும் கிடைக்கலாம். நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படும் என தெரிகிறது. மேலும் கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகளும், எஸ்டிபிஐ கட்சிக்கு 1 தொகுதியும் திமுக கொடுக்கும் என தகவல்கள் கூறுகின்றன.
55
காங்கிரஸ் இருக்குமா? வெளியேறுமா?
ஆனால் இது உத்தே பட்டியல் தான். ஏனெனில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நிலைக்குமா? இல்லை திமுகவை முறித்துக் கொண்டு தவெகவுடன் இணையுமா? என்று உறுதியாக தெரியவில்லை. அப்படி ஒருவேளை காங்கிரஸ் வெளியேறினால் விசிக, மதிமுக, இடதுசாரி கட்சிகளுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்படும். காங்கிரஸின் முடிவு என்ன? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.