Co-Optex: வேற லெவலில் கோ-ஆப்டெக்ஸ்! ஆஃபர்களை அள்ளி வீசியது மட்டுமல்லாமல்! இதுவும் இருக்காம்!

First Published Oct 22, 2024, 8:28 PM IST

Co-Optex: கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் இந்த தீபாவளிக்கு ரூ.100 கோடி விற்பனை இலக்கை நிர்ணயித்துள்ளது. புதிய வடிவமைப்புகளுடன் கூடிய ஆடைகள் மற்றும் துணிகள் விற்பனைக்கு வந்துள்ளன. குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அரசின் கைத்தறி, துணிநூல் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோ-ஆப்டெக்ஸ், இந்திய அளவில் முன்னணி கைத்தறி நிறுவனமாக செயல்படுகிறது. நடப்பாண்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 11 மண்டலங்களில் உள்ள 150 விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனையை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள தில்லையாடி வள்ளியம்மை விற்பனை நிலையத்தில்  தீபாவளி சிறப்பு விற்பனையினை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். சிறப்புரிமை அட்டை (privilege card) வழங்கி, புதிய கைத்தறி இரகங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து முதல் விற்பனையினை துவக்கி வைத்தார். 

Latest Videos


இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் காந்தி: தீபாவளி பண்டிகை விற்பனையைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு ரூ.76.25 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு ரூ.100 கோடி மதிப்பிலான கைத்தறி துணிகளை விற்பனை செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனியார் துணி நிறுவனங்கள், கோ-ஆப்டெக்ஸ் துணியின் தரத்துக்கு போட்டி போட முடியாது. பொங்கல் பண்டிகைக்கு 1 கோடியே 77 லட்சம் வேட்டி, சேலைகளை குடும்ப அட்டைதாரர்களுக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளோம்.

தீபாவளி விற்பனைக்காக இளம் தலைமுறை மகளிருக்கான ஆயத்த ஆடைகளான குர்த்தீஸ், கிராப் டாப், ஷார்ட்ஸ், ஜாக்கெட், ஸ்கர்ட்ஸ் உள்ளிட்ட ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 700 புதிய வடிவமைப்பில் காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம், சேலம் மற்றும் கோவை பட்டுச் சேலைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெய்யப்பட்ட பருத்தி சேலைகள், கைலிகள், மெத்தை விரிப்புகள், போர்வைகள், ஆடவருக்கான பல்வேறு வகையான சட்டைகள், வேட்டிகள், துண்டுகள், சுடிதார் ரகங்கள், வீட்டு உபயோக ரகங்கள் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஆகியவை புதிய வடிவமைப்பு மற்றும் வண்ணங்களில் உற்பத்தி செய்யப்பட்டு  தீபாவளிக்கு விற்பனைக்கு வைக்கப்பட்டவுள்ளது

இது தவிர, மூங்கில் இழையால் உற்பத்தி செய்யப்பட்ட துண்டு ரகம் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் துணிகள் வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களும் ‘கோ-ஆப்டெக்ஸ்’ குடும்பத்தின் ஒரு மதிப்பு மிக்க உறுப்பினராகக் கருதி, சிறப்புரிமை அட்டை வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் வாங்கும் ரூ.100 நிகர மதிப்பிலான துணிக்கு ஒரு புள்ளி வழங்கப்படும். ஒரு புள்ளி என்பதின் மதிப்பு ஒரு ரூபாய் ஆகும். இதன் மூலம் ஒவ்வொரு முறை வாடிக்கையாளர்கள் துணிகள் வாங்கும் போது, சேரும் புள்ளிகளை அடுத்தமுறை துணிகள் வாங்கும் போது அந்த புள்ளிகளுக்கான தொகையை ஈடு செய்து கொள்ளலாம் என அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார். 

click me!