தேசிய கல்விக்கொள்கை விவகாரத்தில் மத்திய அரசு எந்த மொழியையும் திணிக்கவில்லை. ஏதேனும் ஒரு மொழியை மூன்றாவது மொழியாக படிக்க வேண்டும் என்று தான் சொல்கிறோம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், “கல்வி நிதி விவகாரம் தொடர்பாக 2 ஆண்டுகளாகப் பேசி வருகிறேன். மீண்டும் சொல்கிறேன். இந்த விவகாரத்தை தமிழக அரசு அரசியலாக்க நினைக்கிறது. இது தொடர்பாக நாடாமன்றத்திலும் நான் பேசியுள்ளேன். தேசிய கல்விக் கொள்கையை ஒட்டுமொத்த நாடும் ஏற்றுக் கொண்டுள்ளது.
24
RTE நிதி பங்கீடு..
தமிழகத்தில் மதிய உணவுத் திட்டம் உள்ளிட்ட பல நல்ல திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி அளித்து வருகிறது. நடப்பு கல்வி ஆண்டு வரை தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு வழங்கி உள்ளது. RTE திட்டத்திற்கான நிதி பங்கீட்டில் நீதிமன்றம் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் செயல்படுவோம்.
34
மத்திய அரசின் திட்டங்களை ஏற்றால் தான் நிதி
சமக்ர சிக் ஷா நிதி விவகாரம் தொடர்பாக தமிழக அமைச்சர் அன்பில் மகேஸ், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் என்னை சந்தித்தனர். மத்திய அரசின் ஒப்பந்தத்தை ஏற்றால் மட்டுமே அந்த நிதியை மத்திய அரசு வழங்கும் என்று தெளிவாக சொல்லிவிட்டேன். இது மாணவர்களின் நலன் சார்ந்த பிரச்சினை. இதில் அரசியல் செய்யக் கூடாது.
மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு அரசியலாக்கப் பார்க்கிறது. தாய் மொழியுடன் சேர்த்து ஏதாவது இரு மொழிகளைக் கற்க வேண்டும் என்பதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம். 3வது மொழியாக ஏதாவது ஒரு மொழியை தேர்வு செய்ய வேண்டும் என்று தான் சொல்கிறோம். மத்திய அரசு எந்த மொழியையும் திணிக்கவில்லை. நாட்டில் 10 சதவீதம்பேர் மட்டுமே ஆங்கிலம் பேசுகிறார்கள். மற்றவர்கள் அனைவரும் தங்கள் தாய் மொழியைத் தான் பேசுகிறார்கள்.