Road Accident: கோவை பொள்ளாச்சியை சேர்ந்த தம்பதியினர், தங்களது 60வது திருமணத்திற்காக திருக்கடையூர் சென்றபோது தஞ்சாவூர் அருகே விபத்தில் சிக்கினர். இந்த கோர விபத்தில் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த சுப்பிரமணியன் (60). இவரது மனைவி கலாவதி (59). இவர்களுக்கு 60வது திருமணத்திற்காக திருக்கடையூர் செல்ல திட்டமிட்டனர். அதன்படி மகன் ராகேஷ் (35), மருமகள் ராஜேஸ்வரி (28) மற்றும் தாய், தந்தை உள்ளிட்ட 5 பேர் காரில் மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர்.
24
கார் மீது நேருக்கு நேர் மோதிய லாரி
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்தில் உள்ள நரசிங்கன்பேட்டை அருகே இவர்களுடைய கார் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
34
விபத்தில் தம்பதி பலி
இந்த கோர விபத்தில் சுப்பிரமணியன், கலாவதி தம்பதியினர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மகன், மருமகள், கார் ஓட்டுநர் உள்பட மூவர் படுகாயமடைந்து உயிரிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்த 3 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இந்த விபத்து குறித்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 60ம் திருமணத்திற்காக திருக்கடையூர் சென்று கொண்டிருந்த கணவன் - மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.