Published : Jul 08, 2025, 03:59 PM ISTUpdated : Jul 08, 2025, 04:09 PM IST
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. ஸ்ரீகாந்தின் நண்பர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி இன்று உத்தரவிட்டது.
25
சிக்கிய ஸ்ரீகாந்த்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பாரில் நடந்த தகராறில், அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நடிகர் ஸ்ரீகாந்த் பிரசாந்திடம் இருந்து போதைப்பொருள் வாங்கியதாகத் தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார்.
35
ஸ்ரீகாந்தின் நண்பர்கள்
இந்த வழக்கில் ஸ்ரீகாந்தின் நண்பர்களாகக் கூறப்படும் பிரதீப், கெவின் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையின் தொடர்ச்சியாக, இந்த விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி காவல்துறையினர் அவரைத் தேடி வந்தனர். பின்னர் கிருஷ்ணா தானாகவே முன்வந்து சரணடைந்தார்.
கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா இருவரும் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தன.
ஸ்ரீகாந்த் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "ஸ்ரீகாந்திடம் இருந்து எந்தவித போதைப்பொருளும் கைப்பற்றப்படவில்லை" என்று வாதிட்டார். அதேபோல, கிருஷ்ணா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "மருத்துவ பரிசோதனையில் கிருஷ்ணா போதைப்பொருள் பயன்படுத்தியதாக நிரூபிக்கப்படவில்லை" என்று வாதிட்டார்.
55
நிபந்தனை ஜாமீன்
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி நிர்மல்குமார், ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, இன்று ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஜாமீனின் நிபந்தனைகள் குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.