அதாவது சில நாட்களுக்கு முன்பு ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் தமிழக முதல்வரின் (அரசியல்) சிறப்புப் பணி அதிகாரியாக (OSD) நியமிக்கப்பட்டார். ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் தவெக தேர்தல் வெற்றியை துல்லியமாக கணித்தவர் என ஊடகங்களில் பேசப்பட்டது. நீண்ட நாட்களாக தன்னுடன் இருக்கும் அவருக்கு விஜய் அரசு பதவி வழங்கினார்.
கடும் எதிர்ப்பால் வாபஸ்
ஜோதிடருக்கு அரசு பதவி வழங்கிய முதல்வர் விஜய்க்கு இடதுசாரிகள், விசிகவை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்தனர். ''முதல்வர் விஜய்க்கு ஜோதிடத்தில் மீது நம்பிக்கை இருக்கலாம். அது அவரது தனிப்பட்ட உரிமை. ஆனால் அரசு பதவிகளில் அரசியலமைப்பு சட்டத்தை மீறி ஜோதிடரை எப்படி நியமிக்கலாம்'' என அவர்கள் விஜய்க்கு கேள்விகளை எழுப்பினர். மேலும் திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தவெக அரசுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தன.
பல்வேறு தரப்பில் இருந்தும் எழுந்த கடும் கண்டனத்தால் நியமிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் ஜோதிடர் ராதன் பண்டிட்டின் நியமன ஆணையை முதலமைச்சர் விஜய் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டார். இது குறித்து கருத்து தெரிவித்த ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் இதில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை. விஜய் எனது மகன் போன்றவர் என்று கூறினார்.