Chennai Parandur Airport : பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து! ரூ.50,000 கோடி இழப்பா? விஜய் அரசின் அடுத்த பிளான் என்ன?

Published : May 28, 2026, 02:27 PM IST

Chennai Parandur Airport : விஜய் தலைமையிலான தவெக அரசு, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்துள்ளது. இந்த முடிவால் ₹50,000 கோடி முதலீட்டு இழப்பு மற்றும் வேலைவாய்ப்பு சவால்கள் குறித்த கவலைகள் எழுந்துள்ளன.

PREV
15
முந்தைய திமுக அரசு

தமிழ்நாட்டில் கடந்த ஆட்சிக் காலத்தில் பெரும் விவாதப் பொருளாகவும், அரசியல் ரீதியாகப் பெரும் கரும்புள்ளியாகவும் பார்க்கப்பட்டது பரந்தூர் பசுமை வழி விமான நிலையத் திட்டம். சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையத் தேவைக்காக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 3,700 ஏக்கர் பரப்பளவில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முந்தைய திமுக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வந்தது.

25
திட்டத்திற்குத் தடை விதித்த தமிழக அரசு

பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு ஆரம்பம் முதலே அப்பகுதி மக்களும் விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இவர்களுக்கு ஆதரவாக, தவெக தலைவர் விஜய் எதிர்க்கட்சியாக இருந்தபோது தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்தார். தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, விஜய் தலைமையில் தமிழகத்தில் புதிய அரசு அமைந்துள்ள சூழலில், பரந்தூர் விமான நிலையப் பணிகளைத் தொடர்வதற்கு தவெக அரசு அதிரடியாகத் தடை விதித்து, திட்டத்தைக் கைவிட்டுள்ளது.

35
ரூ.50,000 கோடி இழப்பும் வேலைவாய்ப்பு சவால்களும்

இந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மாநிலத்தின் எதிர்காலப் பொருளாதார வளர்ச்சி குறித்த கவலைகளும் எழுந்துள்ளன. ஒரு சர்வதேச விமான நிலையம் அமையவிருந்த திட்டம் கைவிடப்பட்டதன் மூலம், தமிழகத்திற்கு வரவிருந்த சுமார் 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் மற்றும் அதன் மூலம் உருவாகியிருக்க வேண்டிய லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், இந்த உள்கட்டமைப்புத் திட்டம் முடங்கியதால் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களின் தொழில் வளர்ச்சி தேக்கமடைந்து, மாநிலத்தின் முன்னேற்றம் பின்னோக்கிச் செல்லக்கூடும் என்ற அச்சமும் தொழில் துறையினரிடையே நிலவுகிறது.

45
கையகப்படுத்தப்பட்ட 1,700 ஏக்கர் நிலங்களின் நிலை என்ன?

விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், ஏற்கனவே மக்களிடமிருந்து பெறப்பட்ட நிலங்களின் எதிர்காலம் என்ன என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. கடந்த ஆட்சியில் சுமார் 1,700 ஏக்கர் நிலங்கள் நேரடியாக நில உரிமையாளர்களின் சம்மதத்துடன் அரசுக்கு முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளன. சட்டப்பூர்வ நில எடுப்பு முறையின் கீழ் இவை கையகப்படுத்தப்படவில்லை என்பதால், இந்த நிலங்களை உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைப்பதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.

நிலங்களை அரசுக்கு வழங்கியவர்களுக்கு அதற்கான இழப்பீட்டுத் தொகையும் முழுமையாக வழங்கப்பட்டு விட்டது. ஒருவேளை நிலத்தை மீண்டும் பெற விரும்பினால், அவர்கள் வாங்கிய தொகையை அரசிடம் திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும். இதனால், இந்த 1,700 ஏக்கர் நிலங்களை அப்படியே அரசின் வசம் வைத்துக்கொண்டு, அங்கு புதிய 'சிப்காட்' (SIPCOT) போன்ற அதிநவீன தொழிற்பூங்காவை அமைக்கலாமா என்று புதிய அரசு தற்போது தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

55
சென்னையின் அடுத்த கட்டம் என்ன?

பரந்தூர் திட்டம் அதிகாரப்பூர்வமாகக் கைவிடப்பட்டுள்ளதால், சென்னையின் வான்வழிப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அரசு மாற்று ஏற்பாடுகளைச் செய்யுமா அல்லது தற்போதுள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தையே மேலும் விரிவாக்கம் செய்ய வழிகளைத் தேடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மக்களின் விவசாய நிலங்களைக் காக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தாலும், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்காத வண்ணம் மாற்றுத் தொழில் திட்டங்களை முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு எவ்வாறு கொண்டு வரப்போகிறது என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories