
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தினந்தோறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். இதே போல புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார். மேலும் தமிழகத்தில் அவ்வப்போத நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பாக அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளோடு ஆலோசித்து வருகிறார். மேலும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.
தொடர் பணியின் காரணமாக உடல் நிலை அவ்வப்போது பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஜூலை 21ஆம் தேதி காலை வழக்கமான நடைப்பயிற்சியின்போது லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதை அடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் உடல்நிலையை பரிசோதனை செய்த பிறகு சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்கள். அடுத்தாக தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் சிறப்பு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதற்கு சீரற்ற இதயத் துடிப்பு காரணமாக இருக்கலாம் என மருத்துவ பரிசோதனைகளில் கண்டறியப்பட்டது. இதற்காக ஜூலை 24 அன்று ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது, இந்த சிகிச்சைக்கு பிறகு முதலமைச்சர் நலமுடன் இருப்பதாகவும், மேலும் 2-3 நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவமனையில் இருந்தபோதும், ஸ்டாலின் அரசு மற்றும் கட்சி பணிகளை தொடர்ந்தார். “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் மக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகையின்போது, கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சர் தங்கம் தென்னரசு மூலம் அனுப்பி வைத்தார்.
இதனை தொடர்ந்து கடந்த 27ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் மாலை 6:15 மணியளவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முழுமையாக குணமடைந்து, அப்போலோ மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். மருத்துவர்கள் அவரை மேலும் 3 நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தினர், அதன்பிறகு வழக்கமான பணிகளை தொடரலாம் என கூறப்பட்டது.
இதனையடுத்து கடந்த 10 நாட்களாக சிகிச்சையில் இருந்த முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மீண்டும் தலைமைசெயலகத்தில் அரசு பணிகளை தொடங்கவுள்ளார்.
இன்று தலைமை செயலகத்தில் காலை 10.15 மணியளவில் முதலமைச்சர் அலுவலக நுழைவாயில் அருகில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பயின்று, 2025-26 ஆம் கல்வி ஆண்டில் புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களான இந்திய தொழில்நுட்ப கழகம், ஒன்றிய பல்கலைக்கழகங்கள், தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனம், தேசிய சட்டப் பல்கலைக்கழகம், Miranda House, University of Delhi போன்றவற்றில் சேர்க்கை பெற்ற 135 மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துகிறார்கள்.
காவல் துறை சார்பில் 27 கோடியே 59 இலட்சம் ரூபாய் செலவிலும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் 13.54 கோடி ரூபாய் செலவிலும், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பில் 60 இலட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மற்றும் தடய அறிவியல் துறை சார்பில் 3 கோடியே 74 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள போதை மருந்து ஆய்வுப் பிரிவுகள் ஆகியவற்றை திறந்து வைத்து, 229.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மதுரை மத்திய சிறைச்சாலை கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்கள்.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் தட்டச்சர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 39 நபர்களுக்கும், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் கருணை அடிப்படையில் திருமதி கிருஷ்ணவேனி என்பவருக்கும் பணி நியமன ஆணையினையும் வழங்குகிறார்கள்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் வடிவமைக்கப்பட்ட ”தமிழ்நாடு மாநில திருநங்கையர் கொள்கை-2025”-யினை வெளியிடுகிறார்கள். வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் 27 கோடியே 4 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 மாநிலவரி அலுவலகக் கட்டடங்கள் மற்றும் 12 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் செங்கல்பட்டு பதிவு மாவட்டத்தில் திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்தினை பிரித்து புதியதாக உருவாக்கப்பட்டுள்ள நாவலூர் மற்றும் கேளம்பாக்கம் ஆகிய இரண்டு புதிய சார்பதிவாளர் அலுவலகங்கள் ஆகியவற்றை திறந்து வைக்கிறார்கள்