Published : May 16, 2025, 07:36 AM ISTUpdated : May 16, 2025, 07:41 AM IST
புழல் சிறையில் கை, கால் முறிவுக்கு சிகிச்சை அளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில், கைதிகள் மட்டும் வழுக்கி விழுந்து காயமடைவது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவருக்கு கை, கால் முறிவுக்கு சிகிச்சை வழங்க கோரி அவரது தந்தை இப்ராஹிம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், இடது காலிலும், வலது கையிலும் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு உரிய சிகிச்சை வழங்க சிறைத்துறை நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
23
நீதிபதிகள் கேள்வி
இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் கோடைகால விடுமுறை நீதிபதிகளான ஜிஆர் சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கைது செய்யப்பட்ட நபருக்கு எவ்வாறு வழுக்கி விழுந்து கை, கால் எலும்புகள் முறிகின்றன என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், கழிவறையில் வழுக்கி விழுந்ததால் காயம் ஏற்பட்டதாக தெரிவித்தார். மேலும் அவருக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
33
உரிய சிகிச்சை அளிக்க உத்தரவு
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், காவல் நிலையங்களில் உள்ள கழிவறைகள் கைதிகள் மட்டும் வழுக்கி விழுந்து காயம் ஏற்படும் வகையில் உள்ளதா? அந்த கழிவறைகளை ஆய்வாளர்கள் பயன்படுத்துவதில்லையா? அவர்களுக்கு எதுவும் ஆவதில்லை ஏன் என கேள்வி எழுப்பினர். இதுபோன்ற செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட காவலர்கள் பணியை இழக்கும் நிலை ஏற்படும் என எச்சரித்தனர். பின்னர் மனுதாரரின் மகனுக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்குமாறு புழல் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.