Published : Jul 27, 2024, 07:59 AM ISTUpdated : Jul 27, 2024, 08:02 AM IST
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது.
சென்னை பெரம்பூரில் ஜூலை 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக மறைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள், ராமு, திமுக நிர்வாகியின் மகன் சதீஷ், அதிமுக நிர்வாகியும், வழக்கறிஞருமான மலர்க்கொடி, தமாகாவை சேர்ந்த வழக்கறிஞர் ஹரிஹரன், பாஜகவை சேர்ந்த அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் உள்ளிட்ட 16 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், திருவேங்கடம் போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். மேலும் கைதான ஹரிஹரன் கொடுத்த தகவலின் படி வெங்கத்தூர் கூவம் ஆற்றில் வீசப்பட்ட செல்போன்களை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
25
BSP Party Armstrong Murder
இந்நிலையில், 3 நாள் போலீஸ் காவல் முடிந்து நேற்று முன்தினம் பொன்னை பாலு, ராமு, அருள் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் கொலையாளிகளை ஒன்றிணைத்த ஹரிஹரனிடம் தொடர்ந்து 5வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று மாலை விசாரணை முடிந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.
இதனிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேற்று முன்தினம் மாத்தூரை சேர்ந்த வழக்கறிஞர் சிவா கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று இரவு மற்றொரு நபரான பிரதீப் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது. இவர் பெரம்பூர் திருநாவுக்கரசு தெருவைச் சேர்ந்த பிரதீப் (28). கொஞ்ச நாள் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வந்தார்.
45
Advocate Arul
பிரதீப்தான் ஆம்ஸ்ட்ராங்கின் நடமாட்டத்தை உன்னிப்பாகக் கவனித்து தகவல் தெரிவித்து வந்துள்ளார். குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் புதிதாக கட்டி வரும் பெரம்பூரில் உள்ள வீட்டை எப்போது பார்க்க வருவார், எந்த இடத்தில் நின்றவாறு மேற்பார்வை செய்வார், அவருடன் யார் யார் வருவார்கள், துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வைத்திருப்பாரா போன்ற தகவலை அவ்வப்போது அருளுக்கு தெரிவித்து வந்துள்ளார்.
இதன் மூலம் சம்பவத்தன்று ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி ஆட்கள் மிக குறைவாக உள்ளனர் என முதலில் பிரதீப் தனது தனிப்பட்ட செல்போன் மூலம் வழக்கறிஞர் அருளுக்கு போன் செய்து கூறியுள்ளார். பிரதீப் ரூட் போட்டு கொடுத்த தகவலை அடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலையை அரங்கேற்றியுள்ளனர். இதனையடுத்து, பிரதீப் மீது வழக்கு பதிவு செய்த செம்பியம் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பூந்தமல்லி கிளை சிறையில் அடைத்தனர்.