Aranilaya Thurai Job Vacancy 2026: தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையில் அறங்காவலர்கள் பணிக்கான விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதுபற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவது வழக்கம். இவர்கள் கோவிலின் நிர்வாகப் பணிகளை கவனித்துக் கொள்வார்கள். அறங்காவலர்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நியமிக்கப்படுவது வழக்கம். கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட சில அறங்காவலர்கள் பதவி விலகியுள்ளதால் புதிதாக அரங்காவலர்களை நியமிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த மாதம் 757 கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் சுமார் 44,000 கோயில்கள் உள்ளன. கோவில்களின் பராமரிப்பு, கும்பாபிஷேகம் உள்ளிட்ட பணிகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் பல கோவில்களுக்கு அறங்காவலர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதால் அதை நிரப்ப தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 49(1) இன் கீழ் பட்டியலில் சேராத 8199 கோயில்களுக்கு பரம்பரை முறை வழி சாராத அறங்காவலர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்தப் பணிக்கு, விண்ணப்பதற்கான தகுதிகள், திருக்கோவில்களின் விவரங்கள், விண்ணப்ப படிவம் ஆகியவற்றை இந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம். https://hrce.tn.gov.in/hrcehome/hrce_trusteeshipdetails.php என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் மூலமாக விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது விரைவு அஞ்சல் மூலமாகவோ மாவட்ட உதவி ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் 25 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். இந்து சமயத்தினை பின்பற்றாதவர்கள், குற்றவியல் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்கள், ஏற்கனவே அறங்காவலராக இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள், அலுவல்கள் கடமைகளை சரியாக செய்யாதவர்கள் மனநலக்குறைவு, மனத்தளர்ச்சியால் துன்புறுபவர்கள், மத்திய அரசு மாநில அரசின் பணியில் இருந்து நீக்கம் பெற்றவர்கள், பணி நிறைவு பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் ஆவர்.
20-08-2026 அன்று மாலை 5:45 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே 1,012 திருக்கோவில்களுக்கு பரம்பரை முறைப்படி சாரா அறங்காவலர்கள் நியமனம் மற்றும் 14 மாவட்டங்களில் மாவட்ட குழு உறுப்பினர்களின் நியமனத்திற்கும் அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.